Lyricist Snehan : தஞ்சையில் பிறந்து, தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதி மிகச் சிறந்த பாடலாசிரியராக திகழ்ந்து வருபவர் தான் சினேகன். இவர் நடிகராகவும் அரசியல் தலைவராகவும் பயணித்து வருகிறார்.
தஞ்சாவூரில் கடந்த 1978 ஆம் ஆண்டு பிறந்த பாடலாசிரியர் சினேகன், கடந்த 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "புத்தம் புது பூவே" என்கின்ற திரைப்படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். கடந்த 2001 ஆம் ஆண்டு பாண்டவர் பூமி என்கின்ற திரைப்படத்தில் ஒளிபரப்பான "தோழா தோழா தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்" என்கின்ற பாடல் மூலம் தமிழ் திரை உலகில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார்.
ஆனால் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது சாமி திரைப்படத்தில் வந்த "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" என்கின்ற பாடல் என்றால் அது மிகையல்ல. தொடர்ச்சியாக தமிழ் திரை உலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த பாடலாசிரியராகவும், நடிகராகவும் பயணித்து வரும் அவர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களோடு இணைந்து அவருடைய மக்கள் நீதி மையம் கட்சியில் ஒரு அரசியல்வாதியாகவும் பயணித்து வருகிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகை கன்னிகா ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் "சினேகம் ஹெர்ப்ஸ்" என்கின்ற ஒரு புதிய பிராண்ட் ஒன்றை தனது மனைவி கன்னிகாவோடு இணைந்து அவர் துவங்கி இருக்கிறார். இது ஒரு ஹெர்பல் ஹேர் ஆயில் பிராண்ட் ஆகும். இந்த எண்ணெய் இப்பொது விற்பனைக்கு வந்துள்ளது.
ஏற்கனவே பிரபல நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அழகு சாதன பொருட்களை தனது நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்து வரும் நிலையில், தற்போது நடிகர் சினேகன் தனது மனைவியோடு இணைந்து ஒரு புது தொழிலில் ஒன்றை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.