இன்று பல பகுதிகளில் பயிர் சாகுபடியை சிரமமாக மாற்றுவது களைகளின் பெருக்கம் தான். களை எடுக்காத பயிர் கால் பயிர் என்பர். 100 செடியுள்ள இடத்தில் களைகளை வளரவிட்டால் கால்பங்கு கூட தேறாது. பலவித போட்டிகளில் பயிர் வளர இயலாது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீர், இடம், சூரியஒளி, சத்துக்கள் இவற்றிற்கு களைகள் போட்டியிட்டு வளரும். களைக்கொல்லிகளை பயன்படுத்தும் போது நிலத்தில் நஞ்சு கலப்பதால் அடுத்த பயிருக்கும் பாதிப்பு தான்.
நவீன ஆராய்ச்சிகளின் பலனாக பல உத்திகள் வந்துள்ளன. நிலத்தில் 2 செ.மீ., உயரத்திற்கு நீர் நிறுத்தி பாலிதீன் போர்வை மூலம் மூடாக்கு அமைத்தால் மூன்றே நாட்களில் முழுமூச்சாக களைகள் அழியும்.

அதுமட்டுமல்ல தீமை செய்யும் பலவித நுண்கிருமிகள், பூஞ்சாண வித்துக்கள், வேர் அழுகல் நோய் உண்டாக்கும் கிருமிகள், நூற்புழுக்கள், கூட்டுப்புழுக்களை அழித்து மண்ணை புது உயிர்த்தன்மை பெற வழிவகுக்கும்.

பஞ்சபூதங்களின் விளையாட்டான விவசாயத்தில் சூரியஒளி ஒன்றே மூலஆதாரம். பாலிதீன் விரிப்பின் மேல் சூரியஒளி படும்போது நீர் சூடாகி ஒரு அலைசூழல் உருவாக்கப்பட்டு நன்மை கிடைக்கும். கோரை, அருகு, பாதாள பைரவி போன்ற களைகளை கட்டுப்படுத்தும் எளிமையான முறை.
தற்போது பாலிஹவுஸ் முறையில் கடைபிடிக்கும் இந்த உத்தியை, அதிக செலவே வராத பாலிதீன் விரிப்பின் மூலம் செய்யலாம். மண்ணை சுத்தப்படுத்தியதும் அதில் நன்மை செய்யும் பூஞ்சாணங்களையும் உயிர்சக்தி தரும் மண்புழு உரம் இடுதல் மிக அவசியம்.