How to Prepare Nitrogen Naturally? You can read this ...

தழைச்சத்து

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தழைச்சத்து என்பது மனிதர்களுக்கு புரதச்சத்து போன்றது. பயிரின் வளர்ச்சிக்கு தழைச்சத்து மிக முக்கியமானது. செயற்கை உரத்தில் யூரியா தழைச்சதிற்கு பயன்படுத்தபடுகிறது. 

தயாரிக்கும் முறை...

ஒரு பாத்திரத்தில் 5 கிலோ சாணம், 3 லிட்டர் மாட்டுச் சிறுநீர், அரை கிலோ வெல்லம் ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து மூடிவைத்து, நொதிக்கவிட வேண்டும். 

இன்னொரு பாத்திரத்தில், நன்கு கனிந்த 15 வாழைப்பழம், கால் கிலோ வெல்லத்தை ஒன்றாகக் கலந்து நொதிக்கவிட வேண்டும். இரண்டு நாட்கள் கழித்து, இந்த இரண்டு கலவைகளையும் ஒன்றாக்கி, ஓரிரு நாட்களுக்கு நொதிக்க வைக்க வேண்டும். 

இதனுடன் தலா ஒரு கிலோ ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் (இந்த உயிர் உரங்களின் விலை மிகவும் குறைவு. அருகில் உள்ளா வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்)

ஆகியவற்றையும் கலந்து, ஒரு நாள் இரவு நொதிக்கவிட வேண்டும். இந்தக் கரைசல், தோசை மாவு பதத்துக்கு மாறி இருக்கும். இதோடு இரண்டு கிலோ கடலைப் பிண்ணாக்கு கலந்து சில மணிநேரம் வைத்திருந்தால், ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, புட்டுப் பதத்துக்கு மாறிவிடும். 

இதை, ஒரு ஏக்கர் நெல் வயலில் பரவலாகத் தெளிக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகி, பயிர் பச்சை பிடித்து ஆரோக்கியமாக வளரத் தொடங்கி விடும்.

இந்த இடுபொருளை, ‘மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல்’ என அழைக்கிறோம். இதற்குப் பதிலாக, இன்னும் எளிய முறையில் அக்கம்பக்கத்தில் கிடைக்கக்கூடிய இலைதழைகளைக் கொண்டேகூட இடுபொருள் தயாரித்து, இலைவழி தெளிப் பாகவும் ஊட்டச்சத்து கொடுக்கலாம். 

இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், பூச்சி விரட்டியாகவும் பயன்படும். இதைத் தயாரிக்க, தலா 5 கிலோ வேம்பு, புங்கன், நொச்சி, நெய்வேலி கட்டாமணக்கு, ஆடாதொடை இலைகளை ஒன்றாகக் கலந்து, அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு, ஆறவைத்து வடிகட்டி மூன்று லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் கலக்கவேண்டும். 

இக்கரைசலில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து, 26 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கருக்குத் தெளிக்கலாம்.