How to Maintain Rice Cultivation ... Finding ...

பயிர் பராமரிப்பு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பயிர் பராமரிப்பிற்கும் ஊட்டத்திற்கும் எந்தவித விலையுயர்ந்த‌ வெளி இடுபொருட்களும் தேவை இல்லை. நம் கொல்லையிலேயெ கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சில எளிதான கரைசல்கள் தயாரித்து நம் பயிரை மிக நேர்த்தியாக வளர்க்கலாம். 

அமுதக் கரைசல்

பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவு செய்து 25 முதல் 30 ஆம் நாள் முதல் பின்வரும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். அமுதக் கரைசல் என்பது உடனடி வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இதைத் தயார் செய்வதன் மூலம் 24 மணி நேரத்தில் நமது கையில் ஒரு வளர்ச்சி ஊக்கி கிடைக்கும். 

இதற்குச் செய்ய வேண்டியது மிகச் சிறிய அளவு வேலையே. முதலில் 1 லிட்டர் மாட்டுச் சிறுநீர், 1 கிலோ மாட்டுச் சாணம் இத்துடன் 250 கிராம் பனைவெல்லம் (கருப்பட்டி அல்லது நாட்டு வெல்லம்) இவற்றை எடுத்து 10 லிட்டர் நீரில் 24 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். முதலில் நீரை எடுத்துக் கொண்டு அதில் மாட்டுச் சாணத்தைக் கரைக்கவேண்டும். பின்பு மாட்டுச் சிறுநீரை ஊற்றிக் கலக்க வேண்டும். 

பின்பு பொடி செய்த பனங்கருப்பட்டியைப் போட்டு நன்கு கலக்கிவிட வேண்டும். கரைசல்கள் கட்டியில்லாமல் கரைந்து விட்டதா என்று பார்த்துவிட்டு மூடிவைத்துவிட வேண்டும். ஒரு நாளில் கரைசல் உருவாகிவிடும். இக்கரைசலை எடுத்து 1 லிட்டருக்கு, 10 லிட்டர் என்ற அளவில் (1:10 அல்லது 10%) சேர்த்து பயிர்களுக்குத் தெளிக்கவேண்டும்.

[அடர் கரைசலை அப்படியே அடிக்கக் கூடாது. நீர்த்த கரைசலைத்தான் அடிக்க வேண்டும். அடர் கரைசல் இலைகளைக் கருக்கிவிடும். கைத்தெளிப்பான் அல்லது விசைத் தெளிப்பான் பயன்படுத்தலாம்] .

இந்தக் கரைசல் உடனடியாக தழை ஊட்டத்தை இலை வழியாக செடிகளுக்குக் கிடைக்கச் செய்கிறது. பூச்சிகளையும் விரட்டுகிறது.