agricultural information about corn

நெல்லில் தரமான விதைகளைத் தேர்வு செய்ய சிறிய அளவுக்கு தண்ணீரை கொதிக்க வைத்து ஒரு இரவு முழுவதும் ஆற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரில் 100 கிராம் வசம்புத்தூள், ஒரு லிட்டர் மாட்டு சிறுநீர் ஆகியவற்றை இட்டு கலக்கி விதை நெல்லில் கொட்ட வேண்டும்.

இக்கரைசலில் மேல் பகுதியில் மிதக்கும் நெல்மணிகள் தரமற்றவை. அவற்றை நீக்கிவிட்டு, அடியில் தங்கி இருக்கும் விதைகளைச் சேகரித்து நல்ல தண்ணீரில் அலசி விதைக்க வேண்டும்.

இப்படிச் செய்யும்போது நோய்களை உண்டாக்கக்கூடிய பூஞ்சாணங்களும் அழிக்கப்படுகின்றன.

சோளம்:

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் உப்பு கலந்த கரைசலிலோ அல்லது மாட்டுச் சிறுநீரிலோ சோள விதைகளை கொட்ட வேண்டும். இப்படிச் செய்வதால் தரமற்ற விதைகள் மேல்பகுதிக்கு வந்துவிடும்.

அவற்றை நீக்கிவிட்டு அடிப்பகுதியில் தங்கியிருக்கும் விதைகளை சுத்தமான தண்ணீரில் அலசி அதை மாலை நேரம் நிழலில் உலர்த்தி, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பஞ்சகவ்யா என்ற அளவில் கலந்து அதில் விதைகளை இட்டு அரைமணி நேரம் ஊறவைத்து பிறகு விதைக்க வேண்டும்.

இதனால் முளைப்புத்திறன் அதிகமாகும். சோளக்குருத்து ஈ மற்றும் கரிப்பூட்டை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க விதைகளை ஊறவைக்கத் தேவையான அளவு தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, ஓர் இரவு முழுவதும் வெட்டவெளியில் வைத்துவிட வேண்டும்.

மறுநாள் காலையில் விதையை அரைமணி நேரம் அந்தத் தண்ணீரில் ஊறவைத்து விதைக்க வேண்டும்.

கம்பு:

தரமான கம்பு விதைகளைத் தேர்வுசெய்ய ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் உப்பு கலந்த கரைசல் தயார் செய்துகொள்ள வேண்டும். அதில் விதை களை இட்டு மிதக்கும் பதர்களை நீக்கிவிட்டு தரமானவற்றை சேகரித்து நல்ல தண்ணீ ரில் அலசி அரை மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும்.