Asianet News TamilAsianet News Tamil

துளசியில் 25 முதல் 30 டன் வரை மகசூல் பெற இந்த முறையில் சாகுபடி செய்யலாம்…

25 to 30 tons of basil grown in this manner can yield up to
25 to-30-tons-of-basil-grown-in-this-manner-can-yield-u
Author
First Published Apr 7, 2017, 11:57 AM IST


ரகங்கள்:

பெரும்பாலும் உள்ளூர் ரகங்களே சாகுபடி செய்யப் படுகின்றன. ஆர்.ஆர்.எல்.01 என்ற மேம்படுத்தப்பட்ட ரகமும் இருக்கிறது. இது எக்டருக்கு 40 டன் தழை மகசூலும் 200 கிலோ எண்ணெய் மகசூலும் கொடுக்கவல்லது.

இனப்பெருக்கம்:

விதைகள் மூலமாக இனவிருத்தி செய்யப்படுகிறது. விதைகள் மிகச் சிறியவைகளாக, தூள் போன்று இருக்கும்.

ஒரு எக்டருக்கு தேவையான நாற்று உற்பத்தி செய்ய 150 முதல் 200 கிராம் விதை போதுமானது.

நாற்றங்கால் தயாரித்தல்:

விதைகள் மேட்டுப்பாத்திகளில் மார்ச் இறுதியில் விதைக்கப்படுகின்றன. 10 நாட்களில் முளைத்து வெளிவந்துவிடும். 6 முதல் 7 வாரங்களில் நாற்றுக்களை பிடுங்கி நடவு வயலில் நடலாம். விதைகளை முளைப்புத்திறன் கெடாமல் 5 வாரங்கள் வரை சேமித்து வைக்கலாம்.

துளசி எல்லாவிதமான மண் வகைகளிலும் வளரும் என்றாலும் வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் செம்பொறை மண் மிகவும் ஏற்றது.

துளசி ஒரு வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப்பயிர். அதிக மழைப்பொழிவும் ஈரப்பதமும் நிரம்பிய இடங்களில் செழித்து வளரும்.

வறட்சி மற்றும் பனியைத் தாங்கி வளரும் திறன் உடையது. எனினும் அவற்றைப் பயிரிடும்போது எண்ணெயின் அளவு குறைந்துவிடுகிறது.

நடவுக்கு பிப்ரவரி மத்திய பகுதி முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் மிகவும் உகந்தவை. விதைகளை நேரடியாக விதைத்தும் சாகுபடி செய்யலாம். அதாவது விதைகளை மணலுடன் கலந்து 50 முதல் 60 செ.மீ. இடைவெளியில் வரிசையில் சிறிது சிறிதாக விதைத்து அவற்றை மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.

நாற்றங்காலில் நாற்றுகள் உற்பத்தி செய்யும்போது எக்டருக்கு 150 முதல் 200 கிராம் விதை தேவைப்படும். நாற்றுக்களை நடவு வயலில் 60 x 60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். நடும்முன் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும். பின் 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்தால் போதும்.

உரமிடுதல்:

எக்டருக்கு 20-25 கிலோ தழைச்சத்து, 10-15 கிலோ மணிச்சத்து உரங்களை நடவுக்கு பின் ஒரு மாதம் கழித்து மேலுரமாக கொடுக்கலாம். இதே அளவு உரங்களை ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் 10 முதல் 15 நாட்கள் கழித்து கொடுக்க வேண்டும்.

மேலும் சாம்பல்சத்தை எக்டருக்கு 75 கிலோ அளவில் இடவேண்டும். நுண்ணூட்டச் சத்துக்களான தாமிரத்தை 50 பி.பி.எம். என்ற அளவில் இலைவழியாக தெளிப்பதன் மூலம் எண்ணெய் மகசூல் அதிகரிக்கிறது.

செடிகளின் வளர்ச்சிப்பருவத்தில் தோன்றும் களைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். பயிர் பாதுகாப்புக்கு மாலத்தியான் 2 மிலி/ லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம்.

அறுவடை:

விதைத்தபின் செடிகளை 90-100 நாட்கள் கழித்து முதன் முறையாக தழைக்காக அறுவடை செய்யலாம். நாற்று நட்ட பயிர்களை 75 முதல் 90 நாட்களில் அறுவடை செய்யலாம்.

செடிகளை முதல் வருடத்தில் தரை மட்டத்திலிருந்து 25 செ.மீ. உயரத்திலும், 2வது வருடம் 20-25 செ.மீ. உயரத்திலும், 3வது வருடம் 35-45 செ.மீ. உயரத்திலும் அறுவடை செய்ய வேண்டும்.

பொதுவாக முதல் அறுவடைக்குப்பின் 50-60 நாட்கள் இடைவெளியில் மற்ற அறுவடைகளைச் செய்து தழைகளைச் சேகரிக்கலாம்.

ஒரு எக்டரில் 25-30 டன் தழை மகசூலும் 200 கிலோ எண்ணெய் மகசூலும் பெறலாம்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios