தமிழகத்திலும் 1-9 வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸா..? பள்ளிக்கல்வி துறையின் அதிரடி அறிவிப்பு...
புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல்- பாஸ் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியான நிலையில் தமிழகத்திலும் அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என தகவல் பரவியது. இதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
புதுச்சேரியில் ஆல் பாஸ்
புதுச்சேரி பள்ளி கல்வித் துறையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு இன்றுடன் முடிவடைகிறது. இந்தநிலையில் அந்த மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பாடவாரியாக எடுத்த மதிப்பெண்களை குறிப்பிட்டு, அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் மாணவர்கள் 'ஆல் பாஸ்' செய்ததற்கான பட்டியலை தயாரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பாடத்திட்டங்களை முழுவதும் முடிக்காத காரணத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்திலும் ஆல் பாஸா?
இந்தநிலையில் இதே நடைமுறையை பின்பற்றி தமிழகத்திலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்படும் என கூறப்பட்டது. இதனை தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் 1 முதல் 12 வரை கட்டாயம் இந்தாண்டு இறுதி தேர்வுகள் உண்டு என மீண்டும் தமிழக பள்ளிகல்வித்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் எனவும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் என பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
திட்டமிட்டபடி தேர்வு
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி வரும் 6-ம் தேதி தொடங்குகிறது. மே 6 முதல் 13-ம் தேதிக்குள்ளாக ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியும் ஆண்டு இறுதி தேர்வானது நடைபெறவுள்ளது. 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 13 ஆம் தேதிக்கு பிறகு கோடை விடுமுறை விடப்படும் என கூறப்பட்டுள்ளது.