பாமக தலைவராக பொறுப்பேற்ற அன்புமணி..! திமுக தலைவர் ஸ்டாலினோடு திடீர் சந்திப்பு..
பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பாமக தலைவராக அன்புமணி
பாட்டாளி மக்கள் கட்சி அரசியலில் பல்வேறு ஏற்றம் இறக்கங்களை பெற்றுள்ள கட்சியாக உள்ளது. வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்கு அதிகமாக உள்ளதன் காரணமாக தங்களது கூட்டணியில் பாமகவை இடம்பெறவைக்க அதிமுக, திமுக கட்சிகள் அதிக தொகுதிகளை கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க போட்டிபோடும் அந்தளவிற்கு வட மாவட்டங்களில் கூட்டணி கட்சியின் வெற்றி உறுதியாகும். இந்தநிலையில் பாமகவை இளைஞர் மத்தியில் மேலும் கொண்டு செல்லவும், தமிழகத்தில் ஆட்சி அமைக்க அடுத்த கட்ட நடவடிக்கைக்கு பாமக தலைமை தயாரானது. இந்தநிலையில் சென்னை திருவேற்காட்டில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் மாநில தலைவராக பணியாற்றி வந்த ஜி.கே. மணிக்கு பா.ம.க.வின் கவுரவ தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதே போல 2006 ஆம் ஆண்டு முதல் கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணிக்கு பாமகவின் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.
ஸ்டாலினை சந்தித்த அன்புமணி
இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பாமகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாமகவின் தலைவராக அன்புமணி தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துவதாக கூறி இருந்தார். இது போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பாமக தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அன்புமணி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.