ஜியோசென்சிங், ஜியோமேப்பிங் மூலம் நீரைச் சேமிப்போம்: பிரதமர் மோடி பேச்சு
நீர் சேமிப்புத் திட்டங்களுக்கு ஜியோசென்சிங், ஜியோமேப்பிங் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘நீர்வளத் தொலைநோக்குத் திட்டம் 2047’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “நமது அரசியலமைப்புச் சட்டத்தில், நீர்வளத்துறை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் ஒன்று. நீர் சேமிப்புக்காக மாநிலங்கள் எடுக்கும் முயற்சிகள் நாட்டின் ஒட்டுமொத்த இலக்குகளை அடைவதில் முக்கியப் பங்களிப்பு ஆற்றுபவை” என்று கூறினார்.
மேலும், நீர் பாதுகாப்பில் இந்தியா பெரும் முன்னகர்வை நிகழ்த்தியுள்ளதாகக் கூறிய பிரதமர் மோடி, நமது நீர்வளத் தொலைநோக்குத் திட்டம் 2047 அடுத்த 25 ஆண்டுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், “நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 75 நீர்நிலைகளை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதுவரை 25 ஆயிரம் நீர்நிலைகள் அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.
“ஜியோசென்சிங், ஜியோமேப்பிங் போன்ற தொழில்நுட்பங்களை நீரைச் சேமிக்க பயன்படுத்த வேண்டும்” என வலியுறுத்திய பிரதமர் மோடி, “ஜல் ஜீவன் மிஷன் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறினார்.