Asianet News TamilAsianet News Tamil

ஊடக வெளிச்சத்துக்காக வழக்கு தொடுப்பதா? மதப் பிரச்சினையில் தலையிட முடியாது: உச்ச நீதிமன்றம் விளக்கம்

வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

Supreme Court refuses to get involved in purely religious issues sgb
Author
First Published Oct 19, 2023, 10:52 AM IST

முழுக்க முழுக்க மதம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து உச்ச நீதிமன்றம் விலகி இருக்கும் என்றும், மத வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

"மத வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் அரசாங்கத்தை கட்டாயப்படுத்தப்போவதில்லை. அது முழுக்க முழுக்க கொள்கை அடிப்படையிலானது. நாடாளுமன்றம் முடிவு செய்யவேண்டிய விஷயம். முறையான சட்டத்தை வடிவமைப்பது, கொள்கை முடிவுகள் போன்றவற்றில் நாங்கள் தலையிடமாட்டோம்" என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்களுக்கும் தங்கள் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பதில் முஸ்லிம்களுக்கு உள்ளதைப் போன்ற உரிமைகள் இருக்கிறது என்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் மனுத்தாக்கல் செய்திருந்தார். அரசியலமைப்பின் 25வது பிரிவின் கீழ் அனைத்து மத பிரிவுகளுக்கும் அத்தகைய உரிமை ஏற்கனவே உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

அயோத்தி ராமர் கோயிலுக்கு வெளிநாட்டினரும் நன்கொடை அளிக்க அனுமதி!

Supreme Court refuses to get involved in purely religious issues sgb

இந்தப் பொதுநல மனு  தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே. பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தேவைப்பட்டால் அரசாங்கத்தை அணுகலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

"இதுபோன்ற மனுக்கள் சிக்கலை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பிரச்சனைகளைக் கையாளும் விதம் முக்கியமானது. பிரச்சினைக்கு ஊடகங்களில் கவனம் கிடைப்பதற்காக மட்டுமே பொதுநல மனு தாக்கல் செய்யக்கூடாது" என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இருப்பினும், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் உள்ள மத நிறுவனங்களை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன், வழக்கறிஞர் சாய் தீபக் மற்றும்  சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் தாக்கல் செய்துள்ள மூன்று மனுக்களை விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டிருக்கிறது.

இந்த மனுக்கள் மாநிலங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு எதிராக சவால்களை எழுப்பியுள்ளதாகவும், அவற்றை நீதிமன்றம் கையாளும் என்றும் உச்ச நீதிமன்றம் விளக்கி இருக்கிறது. இதனை அடுத்து, மனுதாரரான அஸ்வினி உபாத்யாய் தனது மனுவை வாபஸ் பெறுவதாகக் கூறினார்.

வாரம் தோறும் ஒரு புதிய விமானத்தில் பயணிக்கலாம்! ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios