இதுதான் நிர்வாக லட்சணமா; மன்மோகன் சிங்கிற்கு நிர்மலா சீதா ராமன் பதிலடி
இந்தியப் பொருளாதாரத்தை பலவீனமான நிலைக்குக் கொண்டுவந்த மோசமான முன்னாள் பிரதமர், பஞ்சாப் தேர்தலுக்காக மட்டும்தான் பேசுவாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்கின் பேச்சுக்கு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்தை பலவீனமான நிலைக்குக் கொண்டுவந்த மோசமான முன்னாள் பிரதமர், பஞ்சாப் தேர்தலுக்காக மட்டும்தான் பேசுவாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்கின் பேச்சுக்கு மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் நேற்று வெளியிட்ட வீடியோவில் மத்தியில் ஆளும் பாஜக அரசில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதில் , “ நாட்டின் பொருளாதாரக்கொள்கை கேள்விக்குறியாகவிட்டது. வேளாண் சட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் இந்த தேசத்தில் மக்களின் கடன் சுமையை மேலும்அதிகரிக்கச் செய்யும். பாஜக ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரராகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள். மத்தியில் ஆளும்அரசின் நோக்கத்திலும், அவர்களின் கொள்கையிலும் ஏதோ பிரச்சினை இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பதிலடி கொடுத்து மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பஞ்சாப்பில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:
இந்தியப் பொருளாதாரத்தை பலவீனமான, மோசமான நிலைக்குக் கொண்டுசென்றவர் என்று நினைவில் வைக்கக்கூடிய பிரதமர், 22 மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாத பிரதமர், இந்தியாவிலிருந்து அன்னிய முதலீடு வெளியேற்றத்தை தடுக்கமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்த பிரதமருக்கு, எப்படி, திடீரென இந்தியப் பொருளாதாரம் குறித்து நினைவுக்கு வந்தது. இது பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மட்டும்தான் அவர் வாய்திறந்து பேசுவாரா.
அனைவரையும் உள்ளடக்கிய தன்மை குறித்தும் மன்மோகன் சிங்கும் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், பஞ்சாப்பில் தடுப்பூசிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு லாபத்தில் விற்பனை செய்யப்பட்டபோது ஏன் அப்போது மன்மோகன் சிங் பேசவில்லை. தடுப்பூசிகள் லாபம் சம்பாதிப்பதற்கு அல்ல என்று பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் கட்சியைப் பற்றி ஏன் பேசவில்லை. மன்மோகன் சிங் மீது மிகப்பெரிய மரியாதை இருக்கிறது, ஆனால் இதுபோன்ற கருத்தை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
கொரோனாவுக்குப்பின் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாட்டைப் பற்றி, நன்கு கற்றறிந்த இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் தேர்தலுக்காக ஆதாயத்துக்காக மட்டும் பேசலாமா
ஜிடிபியைப் பொறுத்தவரை, சந்தைமதிப்பு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் ரூ.110 லட்சம் கோடியாக இருந்தது, ஆனால், தற்போது ரூ.232 லட்சம் கோடியாக இருக்கிறது. அன்னியச் செலவாணி கையிருப்பு 63000 கோடி டாலர் இருக்கிறது, இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 27500 கோடி டாலர் மட்டுமே இருந்தது. கடந்த 2013-14ம் ஆண்டில் சராசரி பணவீக்கம் 9.5% இருந்தது. ஆனால், தற்போது 5.3% மட்டுமே பணவீக்கம் இருக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான், தேசியப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய ஊழல் நடந்தது. இதுவே உங்கள் அரசின் நிர்வாகத்தை மதிப்பிடப் போதுமானது, நீங்கள் ஏதும் செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது. பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு நிறுவனமான செபி, என்எஸ்இக்கு எதிராகவும், முன்னாள் தலைமை நிர்வாகிகள் சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நரேன் ஆகியோருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடந்த நியமனங்கள் அனைத்தும் கேள்விக்குள்ளாகின்றன
இந்தியாவில் பணக்காரர்கள், ஏழைகள் இடையே இடைவெளி விரிவடைந்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் இந்தியா சரியான புள்ளிவிவரங்களை ஆய்வு செய்யாமல் வெளியிட்டுள்ளது. எந்த கணக்கீடு அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை வெளியி்ட்டார்கள் என்ற கேள்வி எழுகிறது. சொத்து தரவுகளை ஆய்வு செய்து சொத்துக்களை அளவிடுவது, மற்றொன்று கடன்கள் அதிகரிக்கும்போது, சொத்துக்கள் மதிப்பு குறைவது இதில் எதை கணக்கி்ட்டார்கள்
ஏழைகள் வங்கிக்குச் சென்று கடன் வாங்கும்அளவுக்கு இருக்கிறார்கள். இதற்கு காரணம் மத்திய அரசு கொண்டுவந்த ஜன்தன் வங்கிக்கணக்குதான். மக்களின் நுகர்வு அதிகரித்துள்ளது, மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.கல்விக்கடன் பெற முடிகிறது, வர்த்தகத்தை வளர்க்க முடிகிறது, அதிகமாக சம்பாதிக்க முடிகிறது, அதிகமாக நுகர முடிகிறது. சொத்துக்களை வைத்து மதிப்பிடுவது குறைபாடுள்ள வழிமுறை, உண்மையான செல்வத்தின் மீதான தாக்கத்தை அளவிடுவதில்லை
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்