Shah Rukh Khan: அதிகாலை 2 மணிக்கு போன் செய்த ஷாரூக்... அசாம் முதல்வர் கொடுத்த வாக்குறுதி!
நடிகர் ஷாரூக்கான் தன்னை அழைத்துப் பேசியபோது தியேட்டரில் நடந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.
ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி படம் பதான். வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் அண்மையில் சர்ச்சையில் சிக்கியது. அந்தப் படத்தில் காவி உடையில் நடிகை தீபிகா படுகோன் ஆபாச நடனம் ஆடுவதாக இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இந்தி நடிகர் ஷாரூக்கானுடன் பேசியது பற்றித் தெரிவித்துள்ளார். அதில், “பாலிவுட் நடிகர் ஸ்ரீ ஷாரூக்கான் என்னை இன்று காலை 2 மணிக்கு அழைத்துப் பேசினார். கவுகாத்தியில் தனது திரைப்படம் வெளியாகும் தியேட்டரில் நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது மாநில அரசின் கடமை. விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் என்றும் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதாகவும் அவருக்கு உறுதியளித்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அசாமில் ஷாரூக்கானின் பதான் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவித்து நேற்று பஜ்ரங் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பதான் திரைப்படம் திரையிடப்பட உள்ள தியேட்டரில் நுழைந்து போஸ்டர்களைக் கிழித்து எறிந்து தீ வைத்தனர்.
இந்தச் சம்பவம் பற்றி சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அசாம் முதல்வர் சர்மா, தடாலடியாக, தனக்கு ஷாருக்கானை யாரென்றே தெரியாது என்று சொல்லிவிட்டார்.
“இந்த பிரச்னை பற்றிப் பேச பாலிவுட் பிரபலங்கள் நிறைய பேர் என்னைத் தொடர்பு கொண்டார்கள். ஷாருக்கான் என்னை அழைக்கவில்லை. அவர் அழைத்தால் நான் தலையிட்டு என்னவென்று கவனிப்பேன். சட்டம் ஒழுங்கு மீறப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.