மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து பயணிகளுடன் பயணித்த பிரதமர் மோடி!
டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணிகளுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்
டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொள்ள உள்ளார். பல்கலைக்கழகத்தில் உள்ள பல்நோக்கு அரங்கில் இன்று காலை 11 மணியளவில் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதில், கலந்து கொண்டு பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
மேலும், டெல்லி பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கணினி மையம், அகாடமி கட்டிடம் மற்றும் பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் என மொத்தமாக 5 கட்டிடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறார்.
இந்த நிலையில், டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணிகளுடன் இணைந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் மோடி டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
மெட்ரோ ரயிலில் சக பயணிகளிடம் சிரித்துப் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்களின் கருத்துக்களை கேட்டு, தனது எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டார். பயணத்தின்போது, இளைஞர்களின் கருத்துக்களை பிரதமர் மோடி கவனமாக கேட்டுக் கொண்டார்.
&
பிரதமரின் மெட்ரோ ரயில் பயணம் குறித்து ரயிலில் பயணம் செய்த பயணிகள் ஆச்சரியம் தெரிவித்ததுடன், அவருடன் இணைந்து செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.