ஊழல், குடும்ப அரசியலை ஒழிக்க உறுதி எடுக்கிறோம்; பாஜகவின் 44வது நிறுவன நாளான இன்று பிரதமர் மோடி உரை!!
பாஜக நிறுவன நாளில் நாட்டில் வேரூன்றி இருக்கும் ஊழல், குடும்ப அரசியல், சட்டம் ஒழுங்கை சீர் செய்ய உறுதி எடுத்துக் கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார்.
பாஜக இன்று 44வது நிறுவன நாளை கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு இன்று பிரதமர் மோடி கட்சி எம்பிகள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் காணொளி வாயிலாக பேசி வருகிறார்.
பிரதமர் மோடி பேசுகையில், ''பாஜக கட்சியை வளர்க்க கட்சி தொண்டர்கள் செய்த தியாகங்களை கணக்கில் எண்ணி விட முடியாது. மதிப்பிட முடியாத அளவிற்கு கட்சியை வளர்க்க உழைத்துள்ளனர். இந்த நாளில், நாட்டில் வேரூன்றி இருக்கும் ஊழல், குடும்ப அரசியல், சட்டம் ஒழுங்கை சீர் செய்ய உறுதி எடுத்துக் கொள்கிறோம்.
ஹனுமானின் சக்தியைப் போலவே இன்று இந்தியா தனது திறனை உணர்ந்து கொண்டிருக்கிறது. ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு பகவான் ஹனுமனிடம் இருந்து பாஜக உத்வேகத்தை பெறுகிறது. பகவான் ஹனுமனின் முழு வாழ்க்கையையும் நாம் பார்த்தால், என்னால் முடியும் என்ற மனப்பான்மை தான் அனைத்து வகையான வெற்றிகளையும் கொண்டு வந்துள்ளது என்பதை உணரலாம்.
புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகத் தொடரப்பட்ட 14 வழக்குகள் தள்ளுபடி!
பாஜக இந்தியாவுக்காக இரவும் பகலும் உழைத்து வருகிறது. எங்கள் கட்சி 'மா பாரதி', அரசியலமைப்பு மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. எங்கள் கட்சி, எங்கள் தொண்டர்கள் ஹனுமனிடம் இருந்து உத்வேகத்தை, மதிப்புகளை பெற்று செயல்படுவார்கள்.
இன்று, பஜ்ரங் பாலி போன்ற மாபெரும் சக்திகளை இந்தியா உணர்ந்து வருகிறது. கடல் போன்ற பெரிய சவால்களை எதிர்கொள்ள இந்தியா மிகவும் வலிமையாக உருவெடுத்துள்ளது. ஹனுமனால் எதையும் செய்ய முடியும். ஆனால் எதையும் தனக்காக செய்து கொண்டதில்லை. அனைவருக்குமாக செய்தார். இதிலிருந்துதான் பாஜக உத்வேகம் பெறுகிறது.
நாம், ஆரம்பத்திலிருந்தே, நாட்டின் மக்களின் அறிவு மற்றும் மதிப்புகள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளோம், அதுவே 'ஜனநாயகத்தின் தாய். இந்த நம்பிக்கை நாளுக்கு நாள் மேலும் மேலும் வலுப்பெற்று வருகிறது. 'ஏக் பாரத், ஷ்ரேஷ்டா பாரத்' என்பது அதாவது நாட்டின் அனைத்து பண்பாடு, கலாச்சாரங்களை ஒன்றிணைப்பதுதான் பாஜகவின் மந்திரம். ஜனசங்கம் பிறந்தபோது, எங்களுக்கு அதிக அரசியல் அனுபவமோ போதிய வளமோ இல்லை.
பாஜக ஜனநாயகத்தின் கருவறையில் இருந்து பிறந்து, ஜனநாயகத்தின் 'அமிர்தத்தால்' ஊட்டப்பட்டு, வளர்க்கப்பட்டு, அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் வலுப்படுத்த ஆழமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்து, தேசம் 100 ஆண்டுகள் நிறைவடையும் இந்த நல்ல சந்தர்ப்பத்தில், நமது தேசத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும், அனைவரின் இதயங்களை வெல்வதற்கும், தாய் பாரத மாதாவின் கனவுகளை நனவாக்குவதற்கும் உறுதியேற்போம்'' என்றார்.
பாஜகவின் நிறுவன நாளை முன்னிட்டு இதன் தேசியத் தலைவர் ஜேபி நட்டா வியாழக்கிழமை காலை டெல்லியில் உள்ள கட்சியின் மத்திய அலுவலகத்தில் பாஜக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது, பாஜக தொண்டர்களின் ஆயிரக்கணக்கான முயற்சிகளுக்கு 2024-ல் பலன் கிடைக்கும் என்றார் நட்டா.
பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, சமூக நல்லிணக்க வாரத்தில் தீவிரமாக பங்கேற்குமாறு அனைத்து மாநிலத் தலைவர்கள் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தை வெளியிட்டது மட்டுமின்றி, இந்தக் காலக்கட்டத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்தும் நட்டா விவாதித்துள்ளார். முன்னதாக அனைத்து மாநில தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.