மொகாலி தாக்குதல்... யாரும் தப்ப முடியாது.. பஞ்சாப் முதல்வர் அதிரடி..!
தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வை மேற்கொண்டனர்.
பஞ்சாப் மாநில காவல் துறையின் உளவுத்துறை தலைமையகத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து மாநிலத்தில் நிலவி வரும் பொது அமைதியை கெடுக்க நினைக்கும் யாரும் தப்ப முடியாது என அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்து இருக்கிறார்.
“பஞ்சாப் மாநில காவல் துறை மொகாலியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பொது அமைதியை கெடுக்க நினைக்கும் யாரும் தப்ப முடியாது” என முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இது மிகவும் கோழைத்தனமான செயல், இதில் தொடர்புடைய அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவர் என தெரிவித்து இருக்கிறார்.
எச்சரிக்கை:
“பஞ்சாப் மாநிலத்தின் பொது அமைதியை சீர்குலைக்க நினைப்பவர்களின் கோழைத்தனமான செயல் தான் இந்த மொகாலி வெடிகுண்டு தாக்குதல். பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு அந்த கயவர்களின் ஆசையை நிறைவேற்ற ஒரு போதும் அனுமதிக்காது. எந்த விதமான சூழ்நிலையிலும், பஞ்சாப் மாநில மக்களின் ஒத்துழைப்புடன் பொது அமைதி காக்கப்படும். அனைத்து கயவர்களும் நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்படுவர்” என அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தாக்குதல்:
பஞ்சாப் மாநிலத்தில் மொகாலியில் அம்மாநில காவல் துறையின் உளவுத்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று சுமார் 7.45 மணிக்கு இந்த அலுவலகத்தின் வெளியில் இருந்த படி சிலர் கையெறி குண்டை வீசி அங்கிருந்து தப்பி ஓடினர். வெடி விபத்து ஏற்பட்ட சத்தத்தால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதன் பின் நடத்தப்பட்ட விசாரணையில், ராக்கெட் லாஞ்சர் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
எனினும், இந்த தாக்குதல் காரணமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வை மேற்கொண்டனர்.