காற்றை நிரப்பும் போது விபரீதம்... ஜெ.சி.பி. டையர் வெடித்து இருவர் பலி..!
காற்று நிரப்பப்படும் டையரின் மீது ஏறி குதித்து காற்று போதுமான அளவு நிரம்பி இருக்கிறதா என்பதை சரிபார்க்கிறார். இவ்வாறு செய்த போது டையர் திடீரென வெடித்து சிதறியது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் மாவட்டத்தில் வாகன வொர்க்ஷாப் ஒன்றில் ஜெ.சி.பி. இயந்திர வாகனத்தின் டையரில் காற்றை நிரப்பும் போது, திடீரென டையர் வெடித்ததில் அங்கு இருந்த இருண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மே 3 ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் மாவட்டத்தின் சில்தாரா தொழிற்பேட்டை பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இந்த சம்பவம் அதே பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது.
சி.சி.டி.வி. வீடியோ:
சி.சி.டி.வி. கேமரா வீடியோ காட்சிகளின் படி, பணியாளர் ஜெ.சி.பி. வாகனத்தில் பொருத்தப்படும் மிகப் பெரிய டையருக்கு காற்றை நிரப்பிக் கொண்டிருக்கிறார். அப்போது இதே இடத்தில் இருந்த நபர், டையரின் மீது இரும்பு கம்பியை இருமுறை அடிக்கிறார். பின் அங்கு நின்று கொண்டு இருந்த மற்றொரு நபர், டையரின் அருகில் வந்து, காற்று நிரப்பப்படும் டையரின் மீது ஏறி குதித்து காற்று போதுமான அளவு நிரம்பி இருக்கிறதா என்பதை சரிபார்க்கிறார். இவ்வாறு செய்த போது தான், யாரும் எதிர்பாராத நேரத்தில் டையர் திடீரென வெடித்து சிதறியது.
விசாரணை:
டையர் வெடித்துச் சிதறியதை அடுத்து அங்கு இருந்த இரண்டு பணியாளர்களும் காற்றின் வேகத்தில் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காற்றால் தூக்கி வீசப்பட்டதில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்து, அதே இடத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்த இரண்டு ஊழியர்களும் மத்திய பிரதேச மாநிலத்தின் ரெவா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்ட போலீசார் அவற்றை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.