Naba Das: ஒடிசா அமைச்சரைச் சுட்ட காவலர்! முதல்வர், பிரதமர் கண்டனம்
ஒடிசா மாநிலத்தில் சுகாதாரத்துறை அமைச்சரை காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவரே துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்திருக்கிறார்.
ஒடிசா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
நபா தாஸ் இன்று ஜர்சுகுடா மாவட்டம் உள்ள பரஜராஜ்நகர் பகுதியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்துள்ளார். காந்தி சவுக் பகுதியில் காரில் இருந்து இறங்கிபோது நபா தாஸ் அருகில் இருந்த காவலர் ஒருவர் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடியதாக நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிக் குண்டு மார்பில் பாய்ந்துள்ளது. இதனையடுத்த விமானம் மூலம் அவர் புவனேஷ்வருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட உள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனிடையே அமைச்சரைச் சுட்ட உதவி ஆய்வாளர் கோபால் தாஸை ஒடிசா காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து பிரதமர் மோடியும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் நபா தாஸ் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் துப்பாக்கிச்சூடு தொடர்பாக காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாவும் முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
அமைச்சர் நபா தாஸ் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்ற நவீன் பட்நாயக், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அப்போது நபா தாஸின் குடும்பத்தினருக்கும் முதல்வர் நவீன் பட்நாயக் ஆறுதல் கூறினார்.