என் குடும்பத்துக்கு ஆபத்து... சர்ச்சை கருத்து கூறிய முன்னாள் பா.ஜ.க. தலைவர் கதறல்..!
எனது கோரிக்கைகளை பொருட்படுத்தாமல், பலர் எனது வீட்டு முகவரியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்த முன்னாள் பா.ஜ.க. தலைவர் நவீன் குமார் ஜிந்தால், தனது குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாகவும், இஸ்லாமியர்களால் தனது குடும்பத்தார் தாக்குதலுக்கு ஆளாகலாம் என தெரிவித்து இருக்கிறார்.
“என்னை பற்றியோ, எனது குடும்பத்தார் பற்றியோ எந்த தகவல்களையும் யாரும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என தயவு கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். எனது கோரிக்கைகளை பொருட்படுத்தாமல், பலர் எனது வீட்டு முகவரியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனது குடும்பத்தாருக்கு இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது,” என்று நவீன் குமார் ஜிந்தால் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து உள்ளார்.
தொடர் எச்சரிக்கை:
இத்துடன் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர்களின் எண் என கூறி மொபைல் நம்பரின் ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் அவர் தனது ட்விட்டரில் இணைத்து இருந்தார். மேலும் அதில் உள்ள மொபைல் நம்பரை பயன்படுத்துபவர் மீது டெல்லி போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவீன் குமார் ஜிந்தால் வலியுறுத்தி இருக்கிறார்.
கடந்த வாரம் முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்து இருந்ததை அடுத்து, நாடு முழுக்க பெரும் போராட்டங்கள் வெடித்தன. மேலும் நபிகள் குறித்த சர்ச்தை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக பல்வேறு உலக நாடுகளும் எதிர்ப்பு மற்றும் கண்டனங்களை தெரிவித்தன. இதை அடுத்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிந்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அதிரடி நடவடிக்கை:
இவரின் கருத்துக்கள், கட்சியின் அடிப்படை நம்பிக்கைகளுக்கு எதிராக இருந்ததோடு, வன்முறையை தூண்டும் வகையில் இருக்கிறது. “உங்களின் அடிப்படை உறுப்பினர் சந்தா உடனடியாக நீக்கம் செய்யப்படுகிறது, நீங்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்,” என டெல்லி பா.ஜ.க. தலைவர் அதெஷ் குப்தா தெரிவித்து இருக்கிறார்.
நவீன் குமார் ஜிந்தால் தனது சமூக வலைதள பதிவுகள் மூலம் பலமுறை சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வீடியோ ஒன்றை தனது ட்விட்டரில் வெளியிட்ட நவீன் குமார் ஜிந்தாலுக்கு எதிராக பஞ்சாபில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.