அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் பக்தர்கள் மீது பூக்களை தூவி வரவேற்ற முஸ்லீம்கள்... ம.பி.யில் சுவாரஸ்யம்..!
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட முஸ்லீம்கள், ஊர்வலம் செல்வோர் மீது பூக்களை தூவி வரவேற்றதோடு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்பட்டுத்தும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இந்தியாவில் நேற்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நாட்டு மக்களுக்கு அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அனுமன் ஜெயந்தி தினத்தில் நாட்டின் சில பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.
வைரல் வீடியோ:
இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் மத நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் முஸ்லீம்கள் இணைந்து அனுமன் ஜெயந்தி விழா ஊர்வலம் சென்றோர் மீது மலர்தூவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வைரல் வீடியோவின் படி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட முஸ்லீம்கள், ஊர்வலம் செல்வோர் மீது பூக்களை தூவி வரவேற்றதோடு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்பட்டுத்தும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
மோதல்:
இதனிடையே தலைநகர் டெல்லியின் ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. மோதலில் இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். தாக்குதலை தடுத்து நிறுத்த முற்பட்ட போலீசார் இந்த தாக்குதலில் கடுமையாக தாக்கப்பட்டனர். கல் வீச்சை தொடர்ந்து சில பகுதிகளில் தீ வைப்பு போன்ற சம்பவங்களும் நடைபெற்றன.
இதனால் பல வாகனங்கள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. தாக்கப்பட்டவர்கள் பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். கடும் மோதல் காரணமாக அந்த பகுதி முழுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
அனுமன் சிலை திறப்பு:
முன்னதாக குஜராத் மாநிலத்தின் மோர்பியில் 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அனுமன் சிலையை திறப்பதில் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தார். இதுதவிர, "பகவான் அனுமன் பிறந்த நாளில் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனுமன் அருளால் அனைவரின் வாழ்வும் வலிமை, புத்திசாலத்தனம், அறிவு மூலம் நிறையட்டும்," என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.