மனைவிக்காக ரூ. 90 ஆயிரம் விலையில் மொபெட் வாங்கிய பிச்சைக்காரர்...!
மனைவி மீது அக்கறை கொண்டு இருக்கும் சந்தோஷ் குமார் சாஹூவுக்கு நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
காதலிக்கும் பெண்ணை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள ஒருவர் எதை வேண்டுமானாலும் செய்வார். தன் மனைவிக்காக ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள மொபெட் ஒன்றை வாங்கி இருக்கும் பிச்சைக்காரரின் செயல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தின் சிந்த்வாரா பகுதியை சேர்ந்த பிச்சைக்காரர் சந்தோஷ் குமார் சாஹூ தனது மனைவி முன்னிக்கு அடிக்கடி முதுகு வலி ஏற்படுவதாக கூறியதால் மொபெட் ஒன்றை வாங்கி இருக்கிறார். முன்னதாக சந்தோஷ் குமார் சாஹூ டிரை-சைக்கிள் வைத்து இருந்தார். எனினும், தன் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள மொபெட்-ஐ வாங்கி இருக்கிறார்.
நகர முடியாது:
“இனி நாங்கள் சியோனி, போபால் மற்றும் இந்தூர் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும்,” என சந்தோஷ் குமார் சாஹூ தெரிவித்தார். மொபெட் வாங்குவதற்காக சந்தோஷ் குமார் சாஹூ நான்கு ஆண்டுகளாக பணம் சேமித்து வந்துள்ளார். தற்போது மொபைட்டை முழு பணம் செலுத்தி வாங்கி இருக்கிறார். தனது காலில் உள்ள பிரச்சினை காரணமாக இவரால் நகர முடியாது. இதனால் மனைவி முன்னி சந்தோஷ் குமார் சாஹூவை டிரை சைக்கிளில் வைத்து தள்ளி செல்வார்.
இவ்வாறு செய்வதால் முன்னிக்கு அடிக்கடி முதுகுவலி ஏற்பட்டு உள்ளது. டிரைசைக்கிள் மூலம் பல பகுதிகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் இந்த தம்பதி கோயில்கள், மசூதி மற்றும் பேருந்து நிலையங்களில் உறங்குவர். மனைவி மீது அக்கறை கொண்டு இருக்கும் சந்தோஷ் குமார் சாஹூவுக்கு நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
வீடியோ வைரல்:
சந்தோஷ் குமார் சாஹூ மற்றும் முன்னி தம்பதி வாங்கி இருக்கும் மொபெட்டிற்கு மாலைகளால் அலங்கரித்து, அதில் வலம் வருகிறார்கள். பிச்சைக்காரர் என்ற போதிலும் தனது மனைவிக்காக ரூ. 90 ஆயிரம் மதிப்பிலான மொபெட் வாங்கி இருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.