அதிகாரிகளை மிரட்டுவதா? ஆதரவாளர்களை தாக்கிய லாலு பிரசாத் மனைவி
போராட்டத்தின் போது வீட்டை விட்டு வெளியே வந்த ரப்ரி தேவி அங்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தொண்டர்களை தாக்கினார்.
பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மனைவி ரப்ரி தேவி வீட்டில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தினர். லாலு பிரசாத் யாதவ் மீது புதிய ஊழல் வழக்கை பதிவு செய்ததை அடுத்து, அவரின் மனைவி வீட்டில் நேற்று சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் சி.பி.ஐ. ரெய்டுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு 15 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதே போராட்டம் சி.பி.ஐ. ரெய்டு நடந்து கொண்டு இருந்த முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி வீட்டின் முன்பும் நடத்தப்பட்டது.
போராட்டத்தின் போது வீட்டை விட்டு வெளியே வந்த ரப்ரி தேவி அங்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தொண்டர்களை தாக்கினார். மேலும் அவர்களை கடுமையாக திட்டி, அதிகாரிகளுக்கு வழி விட கோரினார்.
ஊழல் வழக்கு:
லாலு பிரசாத் யாதவ் 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை ரெயில்வே மந்திரியாக இருந்த போது, வேலை வாங்கித் தருவதாக பலரிடம் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஊழல் புகாரில் லாலு பிரசாத் யாதவ், ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர்களை சி.பி.ஐ. இணைத்துள்ளது.
சி.பி.ஐ. ரெய்டு காரணமாக ரப்ரி தேவி வீட்டின் முன் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 12 மணி நேரத்திற்கும் அதிகமாக ரப்ரி தேவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது லாலு பிரசாத் யாதவ், அவரின் இளைய மகன் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் இல்லை.
குற்றச்சாட்டு:
சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையின் போது தவறாக நடந்து கொண்டனர் என்றும், மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினர் என ராஷ்ட்ரிய ஜனதா தளம் சி.பி.ஐ. ரெய்டு குறித்து குற்றம்சாட்டி உள்ளது. சி.பி.ஐ. அதிகாரிகள் ரெய்டை முடித்துக் கொண்டு வெளியே சென்றதும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினர் வழியை மறித்து கொண்டு மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.-வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.