”நட்பு இருக்கு, மத்ததெல்லாம் எதுக்கு..” வைரலாகும் ‘இந்து - முஸ்லீம்’ ப்ரெண்ட்ஷிப் - ஹிஜாப் விவகாரம் !!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் பி.யூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் இந்து மாணவர்களும் முஸ்லிம் மாணவிகளுக்கு போட்டியாக காவி துண்டு, தலைப்பாகை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். மேலும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் கர்நாடகத்தில் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே கர்நாடக ஐகோர்ட்டு ஹிஜாப்-காவி துண்டு அணிந்து பள்ளிக்கு வருவதற்கு தடை விதித்து இடைக்கால தீர்ப்பு அளித்தது. இதனால் 5 நாள் விடுமுறைக்கு பிறகு உயர் நிலை பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வந்தனர். ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஒரு சிலர் ஹிஜாப்பை கழற்ற முடியாது என்று கூறி வீட்டுக்கு திரும்பி சென்றனர்.
சில பள்ளிகளில் முஸ்லீம் மாணவிகள், இந்து மாணவிகளுடன் இணைந்து சென்றனர். தற்போது இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மீண்டும் பள்ளி திறந்த பிறகு, வெளியில் பெண்களுக்கான அறை கிடைக்காததால், ஹிஜாப் மற்றும் புர்காவை பொது இடத்தில் அகற்றினர். பலருக்கு அவர்களின் இந்து நண்பர்கள் இந்த பணியில் உதவினர்.
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. உயர்நிலைப் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிந்து தங்கள் இஸ்லாமிய நண்பர்களுடன் கைகோர்த்து நடந்து செல்லும் படம் இப்போது வைரலாகி வருகிறது.
இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவிகள், ஒருவர் பொட்டுடன், மற்றொருவர் ஹிஜாப் அணிந்து, கைகோர்த்துக்கொண்டு, உடுப்பியில் உள்ள அரசு கல்லூரி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தனர். மதம்,ஜாதி என பல்வேறு வகைகளில் பிரித்தாலும் சூழ்ச்சி நடைபெற்றாலும், மாணவர்கள் மத்தியில் ‘நட்பு’ என்றும் மேலானதாகவே இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.