பெண்கள் இலவச பேருந்து பயணம்: கண்டக்டராகும் கர்நாடக முதல்வர்!
பெண்கள் இலவச பேருந்து திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறார்
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், க்ருஹ லட்சுமி திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும், அன்னபாக்யா திட்டத்தில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும், சக்தி திட்டத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்படும். யுவநிதி திட்டத்தில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றுள்ளனர். இதையடுத்து, அக்கட்சி அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மேற்கண்ட ஐந்து முக்கிய வாக்குறுதிகளுக்கும் கர்நாடக அமைச்சரவை கடந்த 2ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
அதன்படி, மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கும் சக்தி திட்டம் ஜூன் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண்கள் இலவச பேருந்து பயண திட்டமான சக்தி திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கவுள்ளார். மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில், பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழக (பிஎம்டிசி) பேருந்தில் ஏறி, நடத்துனர் போன்று செயல்பட்டு இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைக்கவுள்ளதாக அம்மாநில முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பயணத்தின் போது, பெண் பயணிகளுக்கு ‘சக்தி ஸ்மார்ட் கார்டு’களை முதல்வர் சித்தராமையா விநியோக்கிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பெண்கள் இலவச பேருந்து திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்களை அம்மாநில அரசு வெளியிட்டிருந்தது. அதன்படி,
** இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு, பயனாளிகள் தங்கள் அரசு வழங்கிய புகைப்பட அடையாளத்தையும் முகவரிச் சான்றினையும் காட்ட வேண்டும். நடத்துனர்கள் அவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்குவார்கள். அதன் பிறகு, பயனாளிகள் சக்தி ஸ்மார்ட் கார்டுகளை அரசாங்கத்தின் சேவா சிந்து இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொண்டு பயணம் மேற்கொள்ளலாம்.
** சக்தி திட்டத்தின் கீழ் இலவச பயணத் திட்டத்தின்படி, திருநங்கைகள் பயன்பெறலாம்.
** இந்த திட்டத்தின் கீழ் பயணாளர்கள் மாநிலத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகளில் மட்டுமே பயணிக்க முடியும். கர்நாடகாவிற்கு வெளியே உள்ள இடங்களுக்கான பேருந்து சேவைகளில் பயணம் செய்யும் பெண்கள், மாநிலத்திற்குள் பயணம் செய்தாலும் டிக்கெட் வாங்க வேண்டும். உதாரணமாக, ஹூப்ளி (கர்நாடகம்) - கோலாப்பூர் (மகாராஷ்டிரா) பேருந்தில் பெல்காமிற்கு ஒரு பெண் பயணம் செய்தால் டிக்கெட் வாங்க வேண்டும்.
** பெண்களுக்கான இலவச பயணத்திட்டம் சொகுசு பேருந்துகளான ராஜஹம்சா, ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், ஐராவத் கோல்ட் கிளாஸ், நான் ஏசி ஸ்லீப்பர், அம்பாரி டிரீம் கிளாஸ், அம்பாரி உத்சவ், ஃப்ளை பஸ், ஈவி பவர் பிளஸ், வஜ்ரா மற்றும் வாயு வஜ்ரா ஆகிய பேருந்துகளுக்கு செல்லாது.
** இத்திட்டம் மாநிலத்தில் உள்ள நான்கு சாலை போக்குவரத்து கழகங்களான KSRTC, BMTC, NWKRTC மற்றும் KKRTC ஆகியவைகளுக்கு பொருந்தும்.
** KSRTC, NWKRTC மற்றும் KKRTC இன் சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளில் பாதி இருக்கைகள் ஆண்களுக்கு ஒதுக்கப்படும். சொகுசு, ஏசி மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பிஎம்டிசி பேருந்துகளுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
** பெண்கள் பயணம் செய்யும் உண்மையான தூரத்தின் அடிப்படையில் போக்குவரத்து கழகங்களுக்கான தொகையை அரசு திருப்பி செலுத்தும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.