மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை...! ஓட்டல்களில் உணவு விலை அதிகரிக்க வாய்ப்பு...
இன்று முதல் (மே 1) வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 102.5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல்களில் உணவு விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு
பெட்ரோல், டீசல், வீட்டு சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மாத வருமானத்தில் மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க என்ன செய்யப்போகிறோம் என நினைத்து கவலைப்பட்டு வரும் நிலையில் தற்போது வர்த்தக சிலிண்டர் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றனர். அதன்படி மே மாதத்திற்கான வர்த்தக சிலிண்டர் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.
ஓட்டல்களில் உணவு விலை அதிகரிக்க வாய்ப்பு
வணிக பயன்பாட்டிற்கான எல்.பி.ஜி. சிலிண்டரின் விலை ரூ.2,253லிருந்து ரூ.2,355.50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ.102.5 விலை உயர்ந்துள்ளது. 5 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ. 655ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவு விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 10 ரூபாய் இருந்த டீ விலை 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இது போல தோசை, இட்லி போன்ற பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.