போலி வீடியோக்களை நம்பாதீர்கள்: லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் வேண்டுகோள்
தமிழகத்துக்கும் பீகாருக்கும் நல்ல நட்புறவு உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலி வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும் லோக் ஜனசக்தி தலைவர் சிராஜ் பாஸ்வான் கூறியுள்ளார்.
தமிழகம் வந்துள்ள பீகாரைச் சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராஜ் பாஸ்வான் வடமாநிலத் தொழிலாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போலியான வீடியோக்களை நம்ப வேண்டாம் என்றும் தமிழகத்துக்கும் பீகாருக்கும் நல்ல நட்புறவு இருந்துவருகிறது என்றும் கூறியுள்ளார்.
திங்கட்கிழமை செய்தியாளர்ளைச் சந்திந்த சிராஜ் பாஸ்வான், "நான் தமிழ்நாட்டுக்கு வருவது முதல் முறை அல்ல. பலமுறை தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறேன். என்னைப்போல பலர் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து செல்கின்றனர். இங்கு எந்த பாதுகாப்புப் பிரச்சினையும் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தமிழ்நாட்டில் ஆய்வு செய்ய வந்த பீகார் அரசு அதிகாரிகள் தமிழ்நாடு அரசும் காவல்துறையும் எடுத்துள்ள நடவடிக்கைகள் தங்களுக்கு திருப்தி அளிப்பதாகக் கூறினர். வதந்தி பரப்பியவர்களைக் கண்டறிந்து கைது செய்தது, போலி செய்திகளைப் பரப்பினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது, வட மாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து உரையாடியது உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர்கள் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.