ஞானவாபி குறித்து சர்ச்சை கருத்து.... டெல்லியை சேர்ந்த பேராசரியர் அதிரடி கைது...!
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி ரத்தன் லால் தனது சமூக வலைதள அக்கவுண்ட்டில் கருத்தை வெளியிட்டார்.
டெல்லி இந்து கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் ஞானிவாபி மசூதி வழக்கை முன்வைத்து சிவலிங்கம் பற்றி சர்ச்சை கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இந்து கல்லூரியில் வரலாற்று பேராசரியர் ரத்தன் லால். இவர் வரலாற்று பாட பிரிவில் முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார்.
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் பற்றி ரத்தன் லால் தனது சமூக வலைதள அக்கவுண்ட்டில் கருத்தை வெளியிட்டார். இவர் வெளியிட்ட கருத்து மதத்தின் அடிப்படையில் இருவேறு பிரிவினர் இடையே விரோதத்தை தூண்டி, பொது அமைதிக்கு கலங்கம் விளைவிக்கும் என கூறி இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 153A, 295A உள்ளிட்டவைகளின் கீழ் ரத்தன் லால் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
சர்ச்சை கருத்து:
மேலும் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிவலிங்கம் பற்றி தவறாக சித்தரிக்கு ரத்தன் லால் ட்விட்டரில் பதிவிட்டதாக டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜந்தால் காவல் துறையில் புகார் அளித்து இருந்தார். இவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ரத்தன் லாலை கைது செய்துள்ளனர்.
“இந்தியாவில் மட்டும் தான், நீங்கள் எதை பற்றி பேசினாலும் யாரோ அல்லது அவர்களின் மத உணர்வு பாதிக்கப்பட்டு விடுகிறது. இது ஒன்றும் புதிதான காரியம் இல்லை. நான் ஒரு வரலாற்றாளன் என்ற முறையில் பல்வேறு ஆய்வுகளை நான் மேற்கொண்டு இருக்கிறேன். நான் அவற்றை எழுதும் போது, மிகவும் பாதுகாக்கப்பட்ட மொழி நடையை பின்பற்றி இருக்கிறேன். இதை கொண்டு நான் என்னை தற்காத்துக் கொள்வேன்,” என ரத்தன் லால் தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் திக்விஜயா சிங் பேராசிரியர் ரத்தன் லால் கைது செய்யப்பட்டதற்கு ட்விட்டரில் கடும் கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். அதில், “பேராசரியர் ரத்தன் லால் கைதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தனது கருத்துக்களை வெளிப்படுத்த அவருக்கு முழு உரிமையை சட்டம் அளித்து இருக்கிறது,” என குறிப்பிட்டு உள்ளார்.