வெள்ளை மாளிகை கருத்து: ராகுல்காந்தியை சாடிய பாஜக!
இந்திய ஜனநாயகத்தை பற்றிய வெள்ளை மாளிகையின் கருத்தையடுத்து, ராகுல் காந்தியை பாஜக கடுமையாக சாடியுள்ளது
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்திய ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்நிய மன்னில் ராகுல் காந்தியின் இத்தகைய கருத்துகள் இந்திய இறையான்மைக்கு எதிரானது பாஜகவினர் அவரை கடுமையாக சாடி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் என்றும், இந்தியாவில் ஜனநாயகத்தின் ஆரோக்கியத்தை அங்கு செல்லும் எவரும் காணலாம் எனவும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கருத்து தெரிவித்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, ராகுல் காந்தியை பாஜக கடுமையாக சாடியுள்ளது. பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சையத் ஜாபர் இஸ்லாம் கூறுகையில், “ராகுல் காந்தி அவரது அமெரிக்க பயணத்தின் போது இந்தியாவின் ஜனநாயகத்தை “வெட்கமின்றி” தொடர்ந்து விமர்சிப்பது “முரண்பாடானது”. அமெரிக்காவின் கருத்து அவர் மீது விழுந்த அறை. பிரதமர் மோடியின் கீழ் நமது ஜனநாயகம் பாதுகாப்பாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
துடிப்பான ஜனநாயகத்திற்கு இந்தியா ஒரு உதாரணம் என வெள்ளை மாளிகையும் கூறியுள்ளது. உலகமே இந்தியாவைப் புகழ்கிறது ஆனால் ராகுல் காந்தி தனது சொந்த நாட்டைப் பற்றி வெளிநாட்டு மண்ணில் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறார் எனவும் சையத் ஜாபர் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த செய்தி மாநாட்டில் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பியின், இந்திய ஜனநாயகம் தொடர்பான கருத்துகள் பற்றிய கேள்விக்கு சையத் ஜாபர் இஸ்லாம் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ராமர் கோவில், அனுமான் பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ்.. கொதித்தெழுந்த பாஜக - என்ன நடந்தது?
முன்னதாக, அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த செய்தி மாநாட்டில் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மூலோபாய தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, “இந்தியா துடிப்பான ஜனநாயக நாடு. அங்கு செல்லும் எவரும் அதைத் தாங்களாகவே பார்க்க முடியும். நிச்சயமாக, ஜனநாயக நிறுவனங்களின் வலிமை மற்றும் ஆரோக்கியம் விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.