கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளான ஒடிசாவில் மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

உலகயே உலுக்கிய பாலசோர் ரயில் விபத்து நடந்த சில நாட்களிலேயே ஒடிசா மாநிலத்தில் மற்றொரு ரயில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. பர்கர் மாவட்டத்தில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

சுண்ணாம்புக் கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் பல வேகன்கள் பர்காரில் தடம் புரண்டதாக கூறப்படுகிறது. உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. யாரும் காயம் அடையவும் இல்லை. போலீசார் ஏற்கனவே சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Scroll to load tweet…

ஒடிசா மாநிலம் பாலசோரில் விபத்து நடந்த இடத்தில் உள்ள இரண்டு ரயில் தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார். இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அந்தப் பகுதியில் சரக்கு ரயில் இயக்கம் மீண்டும் தொடங்கி இருக்கிறது. பயணிகள் ரயில் சேவையும் இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது.

நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்று நடந்த 51 மணிநேரத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மீண்டும் ஒடிசாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து நேர்ந்திருப்பது ரயில்வே பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

Scroll to load tweet…

பாலசோரில் நடந்த மூன்று ரயில் விபத்தில் குறைந்தது 275 பேர் கொல்லப்பட்டனர். 1,100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை நடந்த மூன்று ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 288 இல் இருந்து 275 ஆக திருத்தப்பட்டது. சில உடல்கள் இரண்டு முறை எண்ணப்பட்டதாக ஒடிசா அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்னும் 187 உடல்கள் உறவினர்களால் அடையாளம் காணப்படாத நிலையில், உறவினர்கள் வந்து உரிமை கோரும்வரை உடல்களை பாதுகாத்து வைத்திருப்பது உள்ளூர் நிர்வாகத்திற்கு சவாலாக உள்ளது. இதனால், பல உடல்கள் பாலசோரில் இருந்து புவனேஷ்வருக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.