Lata Mangeshkar: 2 நாட்கள் துக்கம்.. அரசு மரியாதையுடன் உடல் தகனம்.. லதா மங்கேஷ்கர் மறைவு - அரசு அறிவிப்பு !!
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92) சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
லதா மங்கேஷ்கருக்கு மரியாதை செலுத்தும் வகையில், நாடு முழுவதும் இரண்டு நாட்களுக்கு தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், இவரது உடல் 12.30 மணிக்கு அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் சிவாஜி பூங்காவில் முழு அரசு மரியாதையுடன் மாலை 6.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.