நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சிவி ராமனை கௌரவிக்கும், தேசிய அறிவியல் தினம் இன்று!யார் இந்த சர் சிவி ராமன்
National Science Day 2023: தேசிய அறிவியல் தினம் ஏன் இன்று கொண்டாடுகிறோம் என்பதன் வரலாறு, முக்கியத்துவம் குறித்து இங்கு பார்ப்போம்.
ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் சர் சி.வி.ராமனை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. அவரது கண்டுபிடிப்பின் மகத்துவம் தான் அதற்கு காரணம். இவர் கண்டறிந்த ராமன் சிதறல், போட்டானின் உறுதியற்ற சிதறல் ஆகியவை இன்றளவும் அறிவியல் தொழில்நுட்பத்தில் மைல்கல்.
ராமன் விளைவிற்காக 1930 ஆம் ஆண்டில் இவர் நோபல் பரிசு கூட வாங்கியுள்ளார். நோபல் பரிசை பெற்ற முதல் தமிழரும் இவர் தான் என்றால் பார்த்து கொள்ளுங்கள். அவரது அரும்பெரும் சாதனையை பாராட்டும்விதமாகவே அறிவியல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேசிய அறிவியல் தின வரலாறு
சர் சி.வி.ராமன் கண்டுபிடித்த 'ராமன் விளைவு' கோட்பாட்டை அவர் உலகறிய அறிவித்தது பிப்ரவரி 28ஆம் தேதி தான். ஆகவே இந்நாள் அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டில் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு தான் அறிவியல் தினத்தை அறிவித்தது. அது மட்டுமா? அறிவியலை எளிய மொழியில் பரப்ப தேசத்தில் நாட்டில் திறம்பட செயல்படும் நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் அறிவியல் பரப்புதலுக்கான தேசிய விருது கூட இன்றைய தினம் கொடுக்கப்படுகிறது. சர்வதேச நலனுக்கான சர்வதேச அறிவியல் என்பது தான் இந்தாண்டு அறிவியல் தினத்தின் கருப்பொருளாக கொள்ளப்பட்டுள்ளது.
அறிவியல் தினமே கொண்டாடும் அளவிற்கு ராமன் விளைவில் அப்படி என்ன சிறப்பு உள்ளது என்கிறீர்களா? நிச்சயம் சிறப்பு வாய்ந்தது. தான் ராமன் விளைவு இன்றளவும் அறிவியல் தொழில்நுட்பத்தில் பயன்பட்டு வருகிறது. எந்த ஒரு பெரிய கண்டுபிடிப்பிலும் சிறிய அளவிலான விதிகள் தான் உத்தியாக கையாளப்படும். ராமன் விளைவு உத்திகளை தான் புற்றுநோய் கண்டறிதல், தோலின் வழியாக மருந்தை செலுத்துதல், எலும்புத்தன்மைப் பகுப்பாய்வு, ரத்தகுழாயில் கொலஸ்ட்ரால் படிவதை கண்டறிதல் உள்ளிட்ட பல நோய் கண்டறிதல் விஷயங்களில் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சர்க்கரை நோய் கண்டறியும் ஒரு சாதனத்தில் கூட ராமன் விளைவுதான் அடிநாதம்.
யார் இந்த சர்.சிவி ராமன்?
திருச்சியில் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிறந்தவர், சந்திரசேகர வெங்கட ராமன். இவர் பால்ய காலத்தில் அறிவுக்கூர்மையுடன் இருந்தார். தன் 16ஆவது வயதில் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் முதல் நிலையில் இளங்கலை பட்டம் பெற்றார். அவருடைய 18ஆவது வயதிலேயே முதல் ஆய்வு அறிக்கை லண்டன் அறிவியல் இதழில் வந்தது. அறிவியலில் அவருடைய கால் தடம் அப்போதே உலகறிய பதிக்கப்பட்டது. பிற்காலத்தில் ஒளி, ஒலி, காந்தசக்தி உள்ளிட்ட பல ஆய்வுகளை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: ஜீரணம் ஆகாம வயிற்றில் கேஸ், எரிச்சல்.. சாப்பிடும் போதே என்ன பண்ணனும் தெரியுமா?
அந்த காலத்தில் தனக்கு கிடைத்த அதிக சம்பள அரசாங்க வேலையை கூட கொஞ்ச காலத்தில் உதறிவிட்டு, கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 1929ஆம் ஆண்டில் நம் நாட்டில் செயல்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு ‘சர்’ பட்டம் வழங்கி கௌரவித்தது. அவர் எப்போதுமே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டே இருப்பாராம். அவருடைய அறிவியல் பசியால் நமக்கு கிடைத்த வரங்களில் ஒன்றுதான் 'ராமன் விளைவு'. அது இன்றளவும் மருத்துவ துறையில் தடம் பதித்து வருகிறது.
இதையும் படிங்க: அஷ்டமி அன்று வீட்டில் நல்ல காரியம் தவிர்ப்பதற்கு காரணம் இதுதான்.. மீறினால் அஷ்டலட்சுமிகள் அருளை இழப்பீர்கள்!