பூமியைக் காப்பாற்ற செய்ய வேண்டிய 10 விஷயங்கள்!
பூமியைப் பராமரிப்பது நமக்கு ஒரு பொறுப்பு மட்டுமல்ல, அது ஒரு கட்டாயத்தேவையும் கூட. அதன்படி, பூமியை காப்பாற்ற நாம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்
காலநிலை மாற்றம் என்பது நமது காலத்தின் பிரச்சினை மட்டுமல்ல; வரலாற்றில் அதுகுறித்து வரையறுக்கும் தருணத்தில் நாம் இருக்கிறோம் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்துகிறது. பருவநிலை மாற்றத்தால் வானிலை சூழ்நிலைகள் மாறுவது, உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், கடல் மட்டம் உயர்ந்து, உலகம் முழுவதும் பேரழிவு வெள்ளத்தை ஏற்படுத்தலாம். எனவே, எதிர்கால சேதாரத்தை கருத்தில் கொண்டு உலக நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஆனால், அரசுகள் நடவடிக்கை எடுக்கட்டும்; தனிநபர்களால் என்ன செய்ய முடியும் என்று நாம் ஒதுங்கி விடக்கூடாது. இதில், தனிநபர்களின் பங்கும் அளப்பரியது. பூமியைக் காப்பாற்ற நாம் என்ன செய்யலாம்? சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பசுமை இல்ல வாயு, கரியமில வாயுக்களின் பயன்பாட்டை குறைக்கலாம். பூமியைப் பராமரிப்பது நமக்கு ஒரு பொறுப்பு மட்டுமல்ல, அது ஒரு கட்டாயத்தேவையும் கூட. அதன்படி, பூமியை காப்பாற்ற நாம் செய்ய வேண்டிய 10 விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.
1. தண்ணீர் சேமிப்பு
சிறிய விஷயங்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், தண்ணீர் சேமிப்பு நமது வீட்டில் இருந்தே தொடங்க வேண்டும். உதாரணத்துக்கு, நீங்கள் பல் தேய்க்கும் போது, தண்ணீரை திறந்து விட்டே தேய்க்க வேண்டாம். கூடுமான அளவுக்கு தண்ணீரை அவசியம் கருதி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். உங்கள் வீட்டுக் குழாய்களில் ஒவ்வொரு முறையும் தண்ணீரை அடைப்பதன் மூலம் நீங்கள் பூமிக்கு நல்லது செய்கிறீர்கள் என்று அர்த்தம். தேவையில்லாமல் குழாய்களை திறந்து விடக் கூடாது.
சொட்டு சொட்டாக இதுபோன்று வடியும் தண்ணீரால், நாள்தோறும் நீங்கள் 340 லிட்டர் தண்ணீரை வீணாக்கலாம் என அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் பாட்டில் தண்ணீர் குடிப்பதை நிறுத்துங்கள். அதற்கு பதிலாக வடிகட்டப்பட்ட குழாய் தண்ணீரை குடிக்கலாம். இதன் மூலம், உங்கள் பணம் சேமிக்கப்படுவதுடன், டன் கணக்கிலான பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கவும் நீங்கள் உதவி செய்ய முடியும்.
2. கார்கள் விழிப்புணர்வு
உங்களால் முடிந்தால், வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது அதற்கு மேல் சாலையில் வாகனங்களில் செல்ல வேண்டாம். இதன் மூலம் பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வை ஆண்டுக்கு சராசரியாக 1,590 பவுண்டுகள் உங்களால் குறைக்க முடியும்.
நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது. உங்கள் வேலைகளை நீங்கள் இணைத்து ஒரே சமயத்தில் செய்யலாம். அதாவது, ஒரே பயணத்தில் மளிகைக் கடைக்கு செல்வது மற்றும் பிற வேலைகளை செய்யலாம். அவசர வேலைகளுக்கு மட்டும் வெளியில் வாகனங்களில் செல்லுங்கள். வீட்டில் இருந்து வேலை செய்வது பற்றி உங்கள் மூத்த அதிகாரிகளுடன் பேசுங்கள். அதற்கு முக்கியத்துவம் தரலாம்.
ஆனால் கார்களை பற்றி விழிப்புணர்வுடன் இருப்பது என்பது உங்கள் காரை தொடர்ந்து பராமரிப்பதையும் குறிக்கிறது. கார் உள்ளிட்ட வாகனங்களின் டயர்களில் சரியான அழுத்தத்திற்கு காற்று அடைப்பதன் மூலம், 0.6 சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை மைலேஜ் மேம்படும். இதனால், எரிவாயு பயன்பாடு குறையும். மேலும், உங்கள் காரில் மாசு உமிழ்வு சரியாக இல்லையென்றால் உடனடியாக அதனை சரி செய்யுங்கள்.
3. நடப்பது, சைக்கிள் அல்லது பொதுப் போக்குவரத்து பயணம்
நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதற்கான தெளிவான வழிகள். கூடுதலாக, உங்கள் உடலுக்கு அவை நல்லது. உடற்பயிற்சி செய்தாற்போல் இருக்கும். இதனால், உங்கள் உடலில் இருந்து சில கலோரிக்களை உங்களால் எரிக்க முடியும்.
நீங்கள் நடக்க முடியாத பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், உங்களால் முடிந்தால் கூடுமான அளவுக்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தவும். carpool என்று சொல்லக்கூடிய ஒரே வாகனத்தில் இணைந்தும் பயணிக்கலாம். சாலைகளில் ஒரு காரின் பயன்பாடு தவிர்க்கப்படுகிறது என்றால் கூட சுற்றுச்சூழலில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
4. மறுசுழற்சி செய்யவும்
பயன்பாட்டை குறைத்து, மீண்டும் உபயோகித்து, மறுசுழற்சி செய்ய வேண்டும். ஒரு சோடா கேனை மறுசுழற்சி தொட்டியில் வைப்பதன் மூலம் மாசுபாட்டை குறைக்க உதவலாம். இது உண்மையில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. காகிதமும் கூட அப்படித்தான். சராசரி அமெரிக்க குடும்பம் ஒவ்வொரு ஆண்டும் 13,000 தனித்தனி காகித துண்டுகளை கொட்டுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை பேக்கேஜ் செய்யப் பயன்படுத்தப்பட்டவை.
ஆனால் நீங்கள் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை மளிகைக் கடைக்கு எடுத்துச் செல்லலாம். ஒருமுறை பயன்படுத்து தூக்கி எறியும் தட்டுகள், கரண்டிகள், கண்ணாடி, கப் மற்றும் நாப்கின்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும்போது, உங்களது ஆர்டர்கள் ஒன்றாக வருவதற்கு சாத்தியமுள்ளதா என்று பார்க்கலாம்.
மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கவும். நீங்கள் தூக்கியெறியும் காகிதம் மறுசுழற்சி செய்யப்பட்டு உங்களுக்கு மீண்டும் கிடைப்பதை உறுதி செய்யவும். இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
5. உரம் தயாரிப்பதை முயற்சிக்கவும்
2018ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி, அமெரிக்கர்கள் 292.4 மில்லியன் டன்கள் (265.3 மில்லியன் மெட்ரிக் டன்கள்) குப்பைகளை உருவாக்கியுள்ளனர். அதில் 25 மில்லியன் டன்கள் (23 மில்லியன் மெட்ரிக் டன்) மட்டுமே உரமாக்கப்பட்டுள்ளது. சில குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டன, சில குப்பைகள் எரிசக்திக்காக பயன்பட்டன. ஆனால் அதில் பாதி - 146 மில்லியன் டன்கள் (132 மில்லியன் மெட்ரிக் டன்) - நிலப்பரப்பில் வீணாகக் கிடக்கிறது.
நீங்கள் அதை உங்கள் சொந்த உரமாக மாற்ற முடியுமா என்று முயற்சித்து பாருங்கள். இது நீங்கள் உற்பத்தி செய்யும் திடக்கழிவுகளின் அளவைக் குறைக்க உதவும். அத்துடன் இந்த உரம் இயற்கையானதும் கூட. உங்கள் உள்ளூர் நிலப்பரப்பையும் அது செழுமைப்படுத்த உதவும்.
6. எல்.இ.டி.-க்களுக்கு மாறவும்
காம்பாக்ட் ஃப்ளோரசன்ட் லைட் பல்புகள் (CFLs) சிறந்தவை. அவை 10 மடங்கு அதிகமாக நீண்டகாலம் நீடிக்கும் திறன் கொண்டவை. மேலும் அவை குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகின்றன, ஆனால் அதில் கூட சிக்கல்கள் உள்ளன. பாதரசம் இருப்பதால் அவற்றை அப்புறப்படுத்துவது கடினம்.
எனவே, LED பல்புகளை பயன்படுத்தலாம். அவை மிகக் குறுகிய அலைநீளத்தில் ஒளியை வெளியிடுகின்றன, எனவே அவை ஆற்றல் திறன் கொண்டவை. உங்கள் பழைய ஒளிரும் பல்புகளை எல்இடி பல்புகளுடன் மாற்றத் தொடங்குங்கள். CFL பல்புகளை விட விலை சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால், அதிக நேரம் நீடித்து உழைக்கும். CFL பல்புகள் 8,000 முதல் 10,000 மணிநேரம் வரை நீடித்தால், எல்இடி பல்புகள் குறைந்தபட்சம் 30,000 மணிநேரம் நீடிக்கும்.
7. ஆற்றல் மிகுந்தவர்களாக மாறுங்கள்
உங்கள் வீட்டை அதிக ஆற்றல் திறன் கொண்டதாக ஆக்குங்கள். இதன் மூலம் பணமும் மிச்சமடையும். உங்கள் வீட்டின் ஜன்னல்கள் 25 முதல் 30 சதவிகிதம் வெப்ப அதிகரிப்புக்கு பொறுப்பாகின்றன. அவை பழையதாக இருந்தால், உடனடியாக கவனித்து அதனை மாற்றுங்கள். உங்களது வீட்டை வெப்ப எதிர்ப்பு கொண்டதாக மாற்றுங்கள்.
உங்கள் வீட்டிற்குத் தேவைப்படும் வெப்பத்தை தடுக்கும் அளவானது, வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் எனப்படும் HVAC அமைப்பின் காலநிலையை பொறுத்தது. உங்கள் HVAC சிஸ்டம் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியதில்லை. வெளியில் மிகவும் சூடாகவும் குளிராகவும் இருக்கும்போது ஜன்னல்களை மூடி வைக்கவும். Nest போன்ற நிரல்படுத்தக்கூடிய தெர்மோஸ்டாட்டை நிறுவுவதையும் நீங்கள் பரிசீலிக்கலாம். எனவே நீங்கள் வீட்டில் இல்லாத போது உங்கள் ஆற்றலை வீணாக்கும் HVAC சிஸ்டம் இயங்காது.
8. நிலையான உணவுகளை சாப்பிடுங்கள்
பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வில் 25 சதவிகிதம் பெரிய அளவிலான உணவு உற்பத்தியால் இன்று ஏற்படுகிறது. அப்படியென்றால் நீங்கள் எப்படி நிலையாக சாப்பிடுவீர்கள்? இயற்கை வளங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட விவசாயிகளிடமிருந்து உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம். ஆனால் உள்ளூர் விவசாயிகளிடமிருந்து உங்களால் முடிந்த அளவு வாங்குவது கூட சில சமயங்களில் சிக்கலானதுதான். அதிக அளவிலான முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் குறைவான சிவப்பு இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதும் கூட சிக்கலை ஏற்படுத்துகிறது. நீங்களே சொந்தமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை பயிரிடலாம். நீங்கள் ஒரு தோட்டத்தை உருவாக்கலாம்.
9. மரம் நடுங்கள்
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (IPCC) 2023 அறிக்கை முன்பை விட இப்போது நிலைமை மோசமாக உள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது; பெரும்பாலான நாடுகள் கார்பன் உமிழ்வைக் குறைக்கவில்லை.
ஆனால் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட இயற்கையாகவே ஒரு வழி உள்ளது. அது மரம் நடுவது. தாவரங்கள் இயற்கையாகவே காற்றில் இருந்து கார்பனை உறிஞ்சுகின்றன. ஒரு இளம் மரமானது 13 பவுண்டுகள் (5 கிலோகிராம்) என்ற விகிதத்தில் கார்பனை உறிஞ்சுகிறது. ஒரு குட்டி சின்ன மரமே இவ்வளவு உறிஞ்சுகிறது என்றால், நினைத்துப்பாருங்கள் ஒவ்வொரு மரமும் எவ்வளவு கார்பனை உறிஞ்சும். ஒரு மரம் சுமார் 10 வயதை எட்டியதும் ஆண்டுக்கு 48 பவுண்டுகள் (21 கிலோகிராம்) கார்பனை உறிஞ்சும். மரங்கள் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் சிறிய துகள்கள் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளையும் காற்றில் இருந்து நீக்குகின்றன.
எனவே, அனைவரும் தங்களால் இயன்ற அளவுக்கு மரம் நட வேண்டும். குறைந்தது ஒரு மரமாவது நட வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். அது அனைவருக்குமே நல்லது.
10. பிளாஸ்டிக்கை கைவிடுங்கள்
பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒவ்வொரு நிமிடமும் 1 மில்லியன் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை வாங்குகிறார்கள், மேலும் ஒவ்வொரு ஆண்டும் 5 டிரில்லியன் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். மனிதர்கள் பிளாஸ்டிக்கிற்கு அடிமையாகி உள்ளனர். அதில் 9 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.
68 முதல் 219 மில்லியன் டன்கள் (75 முதல் 199 மில்லியன் மெட்ரிக் டன்கள்) பிளாஸ்டிக் தற்போது நமது பெருங்கடல்களில் உள்ளது. எனவே, இதனை கட்டுப்படுத்த வேண்டும். பாட்டில் தண்ணீர் வாங்குவதை நிறுத்துங்கள். பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை வேண்டாம் என்று சொல்லுங்கள் அதற்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்துங்கள். பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்த வேண்டாம். ஒரு பிளாஸ்டிக் கப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மீண்டும் பயன்படுத்தக்கூடிய கோப்பைகளில் குடிக்கலாம். பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதன் மூலம் கடல்கள் மற்றும் நிலப்பரப்பில் இருந்து ஒரு டன் கழிவுகளைத் திருப்பிவிட முடியும்.