ரூ. 9.95 லட்சம் துவக்க விலையில் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்த டிரையம்ப்
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய கோல்டு லைன் எடிஷன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் கோல்டு லைன் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. ஏற்கனவே விற்பனை செய்யப்படும் 18 மோட்டார்சைக்கிள் மாடல்களுடன் ஒன்பது மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் தெரிவித்து உள்ளது.
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய கோல்டு லைன் சீரிசில் ஆறு மோட்டார்சைக்கிள் மாடல்களும், ஸ்பெஷல் எடிஷனில் மூன்று மோட்டார்சைக்கிள் மாடல்களும் குறுகிய காலக்கட்டத்திற்கு விற்பனை செய்யப்பட இருக்கின்றன. புதிய கோல்டு லைன் சீரிசில் ஸ்டிரீட் ஸ்கிராம்ப்ளர் 900, போன்வில் T100, போன்வில் T120, போன்வில் T120 பிளாக், பாபர் பிளாக் மற்றும் ஸ்பீடுமாஸ்டர் பிளாக் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இவற்றின் விலை ரூ. 9,95,000 என துவங்கி அதிகபட்சமாக ரூ. 12,75,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. புதிய கோல்டு லைன் வெர்ஷனில் புதிய போன்வில் மாடல்களில் உள்ளதை போன்ற பிரத்யேக ஸ்கீம்கள் வழங்கப்பட்டுள்ளன.
"இந்தியாவில் கோல்டு லைன் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களை அறிமுகம் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. வழக்கமான மாடல்களை விட பிரத்யேக நிறங்களில் கிடைக்கும் மாடல்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். கோல்டு லைன் மாடல்களில் பிரத்யேகமாக கைகளாலேயே வரையப்பட்ட பின்-ஸ்டிரைப்கள் மோட்டார்சைக்கிளை தனித்துவம் மிக்கதாக மாற்றுகிறது," என டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியா வியாபார பிரிவு தலைவர் ஷோயிப் ஃபரூக் தெரிவித்தார்.