நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது சிந்தனைமிக்க பட்ஜெட்: ஐஎம்எஃப் பாராட்டு
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் இந்தியாவுக்கான சிந்தனைமிக்க கொள்கை திட்டம் பட்ஜெட் என்று சர்வதேச நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவியா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் இந்தியாவுக்கான சிந்தனைமிக்க கொள்கை திட்டம் பட்ஜெட் என்று சர்வதேச நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவியா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமான் ரூ.39.45 லட்சம கோடி மதிப்பு கொண்ட, பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்து மீண்டு நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக உள்கட்டமைப்பு, சாலைப் போக்குவரத்து, சலுகைவிலை வீடுகள் கட்டுதல் என வேலைவாய்ப்பு, கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் மூலம் உள்கட்டமைப்பு வசதி அதிகரிக்கும்போது வேலைவாய்ப்பு அதிகரிக்கும், அதன்மூலம் பொருளாதார வளர்ச்சி பெறும் என்று நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்நிலையில் சர்வதேச நிதியத்தின் மேலாண் இயக்குநர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவியா, இந்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டையும், நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனையும் பாராட்டிப் பேசியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவின் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டின் சிந்தனைமிக்க கொள்கை திட்டத்துக்கான அறிக்கை. இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சி அடையும் என்று நாங்கள் கணித்திருக்கிறோம். 2022ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் லேசான சரிவு இருக்கிறது.
அதாவது முன்பு 9.5% என்று கணித்தோம், அதை 9% என குறைத்திருக்கிறோம். ஆனால், 2023ம் ஆண்டு மீண்டும் உயர்த்திஇருக்கிறோம். ஏனென்றால், இந்தியாவின் நிலையான பொருளாதார வளர்ச்சி வேறுபாடில்லாமல் இருக்கும் என நாங்கள் நினைக்கிறோம்.
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. பெருந்தொற்று சிரமங்கள் சூழ்ந்தபோதிலும், நிதிச்சூழல் கடினமாக இருந்தபோதிலும், தெளிவான நோக்குடன், சிந்தனையுடன், இலக்கை நோக்கி நகர்ந்துள்ளார்கள்.
வளர்ந்து வரும் சந்தைகளைக் கொண்ட நாடுகளில் இறுக்கமான நிதிச்சூழல் ஒரு பெரிய பிரச்சனையாக மாறவில்லை. முந்தைய காலகட்டங்களுடன் ஒப்பிடுகையில், வட்டி வீதங்களின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. ஏன்? வளர்ந்து வரும் சந்தைகளைக் கொண்ட நாடுகள் இது போன்ற சூழ்நிலைகளை தாங்கும் சக்தியையும், வலிமையையும் உருவாக்கி அதற்கு ஏற்ப பணியாற்றுகிறார்கள். பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்டவுடன் பலர் விவேகமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதால் எந்த சூழலையும் அவர்களால் கையாள முடிகிறது.
குறுகியகால சிக்கல்களை இந்தியா கையாளும்விதம், தீர்க்கும் விதத்தை நாங்கள் நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம். அதேசமயம், நீண்ட கால கட்டமைப்பு மாற்றம், மற்றும் மனிதவள முதலீடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புத்தாக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொருளாதார காரணிகள், கருவிகளைப் பயன்படுத்தி பருவநிலை மாற்ற தடுப்பு திட்டத்தை எவ்வாறு துரிதப்படுத்தலாம் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். நான் இந்தியாவின் பட்ஜெட்டை முழுமையாகப் படித்தேன், தேசத்துக்கான சிந்தனை மிக்க திட்டமாக இருக்கிறது
இவ்வாறு கிறிஸ்டாலினா ஜார்ஜிவியா தெரிவித்தார்