விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கு மயக்க மாத்திரைகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 104 மாத்திரைகள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் சொக்கலிங்கபுரம் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்த நபரை போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். இதையடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரித்தில் அவர் மதுரையைச் சேர்ந்த தீபக்ராஜ் என்பதும் தற்போது அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அவர் பள்ளி மாணவர்களுக்கு மயக்க மாத்திரைகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 104 மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் தீபக்ராஜையும் கைது செய்தனர். பள்ளி மாணவர்களுக்கு மயக்க நிலையில் வைத்திருக்க கூடிய மாத்திரைகளை விற்பனை செய்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.