பள்ளி பருவத்தில் காதல்.. 11ம் வகுப்பு மாணவியை அடித்து கொன்று ஏரியில் வீசிய குடும்பம் - சிக்கியது எப்படி?

Mar 17, 2024, 8:56 PM IST

ஓசூர் அருகே பாகலூர் அடுத்துள்ள பட்டவாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பிரகாஷ் (37) இவரது மனைவி காமாட்சி (33) இவரது மகள் ஸ்புர்த்தி (16) இவர் பாகலூர் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். 
மாணவி ஸ்புர்த்திக்கும், முத்தாலி கிராமத்தை சேர்ந்த சிவா என்ற வாலிபருக்கும் காதல் இருந்து வந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் மாயமாயினர். 

இதுகுறித்து பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிவாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த சிவா உடன் மாணவி ஸ்புர்த்தி தனது காதலை தொடர்ந்துள்ளார். இதனால் அவருக்கு படிப்பில் ஆர்வம் செலுத்த முடியாத சூழ்நிலை இருந்துள்ளது. 

இதனை அறிந்த பெற்றோர் அவரை பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி மற்றும் மாணவியின் பெரியம்மா மீனாட்சி ஆகியோர் மாணவியை அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளனர். பின்னர் மாணவியின் உடலை சாக்கு முட்டையில் கட்டி அங்குள்ள ஏரியில் போட்டு சென்றுள்ளனர். 

மாணவியின் உடல் ஏரியில் கிடப்பதை அறிந்த பாகலூர் போலீசார் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மாணவியின் பெற்றோரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் மாணவியை கொலை செய்ததும், போக்சோ சட்டத்தில் வெளியே வந்த குற்றவாளியுடன் காதல் செய்து வந்ததால் ஆத்திரத்தில் பெற்ற மகளை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து மாணவியின் தந்தை பிரகாஷ், தாய் காமாட்சி, பெரியம்மா மீனாட்சி ஆகிய மூன்று பேரை பாகலூர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.