காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு

Jul 26, 2023, 1:27 PM IST

கேரளா, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில்  உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இரு அணைகளில் இருந்தும் சுமார் 14 ஆயித்து 500 கன அடிக்கு மேல் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்ட  உபரிநீர் நேற்று மதியம் 2 மணி அளவில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது. 

காவிரி ஆற்றில் நீர்வரத்தானது இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,000 கன அடியாக இருந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.