Watch : போராட்டத்திற்கு எதிர்ப்பு - ஈரோட்டில் பேக்ரியை சூறையாடிய இந்து முன்னணியினர்! - 10 பேர் கைது!

Sep 20, 2022, 11:50 AM IST

நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ. ராசா தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணியினர் சத்தியமங்கலத்தில் இன்று ஒரு நாள் முழு கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

அதே சமயத்தில் நேற்று திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சத்தியமங்கலம் நகரம் முழுவதும் கடைகளை திறக்க சொல்லி, துண்டறிக்கைகளை கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.00 மணி அளவில் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் பகுதியில் திறக்கப்பட்ட பேக்கரி ஒன்றை இந்து முன்னணியை சேர்ந்த குண்டர்கள் கற்களை வீசி பேக்கரியில் இருந்த கண்ணாடிகளை உடைத்து நாசப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்குச் சென்ற இந்து முன்னணியினர் அங்கு திறக்கப்பட்டு இருந்த கடைகளை அடைக்க சொல்லி ரகளையில் ஈடுபட்டனர்.

இந்த தகவல் தெரிந்து பேருந்து நிலையம் வந்த சத்தியமங்கலம் நகர மன்ற தலைவர் ஜானகி மற்றும் கூட்டணி கட்சியினர் எதற்காக கடைகளை அடைக்கச் சொல்கிறீர்கள் ? அது அவரவர் விருப்பமென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண் என்றும் பாராமல், நகர் மன்ற தலைவர் ஜானகியை ஒருமையில் பேசி, தகாத வார்த்தைகளால் திட்டியும், தாக்க முயற்சித்த இந்து முன்னணியின் ஈரோடு மாவட்ட தலைவர் சக்திவேல் உள்ளிட்ட 11 பேரை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் சத்தியமங்கலம் நகரப் பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்