Watch : தென்காசியில் தொடரும் கனமழை! நிரம்பி வழியும் அணைகள்!

Aug 2, 2022, 11:04 PM IST

பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது, தொடர் மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளிட்ட அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் அளவுக்கு அதிகமான தண்ணீர் வந்து கொண்டிருக்கும் சூழலில், தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளான கடனாநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

செங்கோட்டை அருகே உள்ள மேக்கரை அடவிநயினார்கோயில் நீர்த்தேக்கத்திற்கு சுமார் 143 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நேற்று 89 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்த்து, 95 கன அடியாக உள்ளது. அதேபோல் கடனாநதி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அணைக்கு 60 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் சூழலில், அணையின் நீர்மட்டமானது தற்போது 85 கன அடியாக உயர்ந்துள்ளது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் தற்போது 47.90 கன அடியாகவும், குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36.10 கன அடியையும் எட்டியு நிரம்பியுள்ளது . மேற்கண்ட அணைகளில் இருந்து தற்போது கார் சாகுபடி விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.