தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வணிகர்கள் கடைகளை அடைத்து தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக மக்களால் கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட விஜயகாந்த் நேற்று உயிரிழந்தார். அரசியலையும் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்ட மாமனிதர் விஜயகாந்திற்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விஜயகாந்த் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, மலைக்குடிப்பட்டியில் கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் கடைகளை அடைத்து தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.