சென்னையில் குடிநீர், பால், மின்விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி; போராட்டத்தில் குதித்ததால் போக்குவரத்து பாதிப்பு

Dec 6, 2023, 7:35 PM IST

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பலபகுதிகள் மழை நீரால் சூழப்பட்டது. பல பகுதிகளில் மழைநீர் வடிந்துவிட்டாலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் தற்போது வரை மழை நீர் சூழ்ந்து இருக்கும் நிலையே நீடிக்கிறது. இதனால் அப்பகுதியில் மின்விநியோகம் செய்வதிலும் சிக்கல் நீடிக்கிறது.

அந்த வகையில் தண்டையார் பேட்டை அடுத்த காந்திநகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்விநியோகம் செய்யப்படாததாலும், பால், குடிநீர் உள்ளிட்ட எந்தவித அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தற்போது வரை எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எங்களை வந்து பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.