கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!

May 9, 2024, 3:43 PM IST

வத்தலகுண்டு முத்துமாரியம்மன் வைகாசி திருவிழா கொட்டும் மழையில் வீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான அம்மன் வீதி உலா வந்து மண்டகப் படிகளில் எழுந்தருளும் நிகழ்ச்சி தொடங்கியது. 

ஆலயத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட முத்து மாரியம்மன் உற்சவ சிலை பக்தர்களால் தூக்கிவரப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான சிறுமியர்கள் கோலாட்டம் ஆடி முத்துமாரியம்மனை வரவேற்றனர். முத்துமாரியம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருளும் நிகழ்ச்சியின் போது திடீரென கோடை மழை கொட்டியது இருப்பினும் கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா நடைபெற்றது.

இன்று  பிலீஸ்புரம், மஞ்சள் ஆற்றங்கரை குடியிருப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப் படிகளில் முத்துமாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்