ஆண்டின் முதல் பிதோஷம் தஞ்சை பெருவுடையார் ஆலய மஹாநந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

Jan 10, 2024, 11:24 AM IST

தஞ்சை பெரியக்கோவில் என்று அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. பெரியகோவிலில் மகாநந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் பிரதோஷம் மற்றும் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் வீற்றிருக்கும் மஹா நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

பக்தர்களால் வழங்கப்பட்ட திரவிய பொடி, அரிசி மாவு பொடி, மஞ்சள், தேன், பால், தயிர், பழவகைகள், கரும்பு சாறு, சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம் பெருமான் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பிரதோஷம் காண்பதால் சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம். ஆகையால் இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பெரிய கோவிலில் குவிந்தனர்.