மகா சிவராத்திரி; கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் விமரிசையாக தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா

Mar 8, 2024, 12:10 PM IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்றது. உலகப் புராதன சின்னங்களில் ஒன்றாக விளங்கி வரும் இக்கோவிலானது தற்போது யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

இப்படி வரலாற்று சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் நாட்டியாஞ்சலி விழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி மகா சிவராத்திரியை முன்னிட்டு முதல் நாளான இன்று நாட்டியாஞ்சலி வெகு விமரிசையாக தொடங்கியது. 

இதில் பெங்களூரு, கேரளா, கல்கத்தா, சென்னை, கோவை, திருச்சி, கடலூர், சிதம்பரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து நாட்டியக் குழுவினர் பங்கேற்று நடனமாடி பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தினர். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இன்று மகா சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில், தற்போது கங்கைகொண்ட சோழபுரத்தில் முதல் நாளான இன்று நாட்டியாஞ்சலி தொடங்கியுள்ளதால் கலை கட்டியுள்ளது.  

இன்று தொடங்கியுள்ள நாட்டியாஞ்சலி விழா இரவு முழுவதும் விடிய, விடிய நடைபெறும். இதனைக் காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.