தஞ்சை பெருவுடையார் ஆலய நந்தியம் பெருமானுக்கு 3 டன் பழங்களால் சிறப்பு அலங்காரம், 108 பசுக்களுக்கு கோபூஜை

Jan 16, 2024, 12:43 PM IST

தமிழர் திருநாளான பொங்கல் விழாவின் இரண்டாம் நாளான மாட்டுப்பொங்கல் விழா தஞ்சை பெருவுடையார் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொடிமரம் முன்பு உள்ள நந்தி மண்டப மேடையில் எழுந்தருளி இருக்கும் 12 அடி உயரமுள்ள நந்தியம் பெருமானுக்கு 2000 கிலோ எடையில் கேரட், வெண்டை, தக்காளி, கோஸ், பச்சை மிளகாய், காலிபிளவர் உள்ளிட்ட பலவகையான காய்கறிகள், 700 கிலோ எடையில் ஆப்பிள், ஆரஞ்ச், அண்ணாசி உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள், 300 கிலோ எடையில் ஜாங்கிரி, முறுக்கு உள்ளிட்ட இனிப்புகளை கொண்டு மொத்தம் 3 டன் எடையில் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து 108 பசுக்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, கழுத்தில் மாலை அணிவித்து. வஸ்திரம் சாத்தப்பட்டு மங்கள வாத்யங்களுடன் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோ.பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நந்தியம் பெருமானை வழிப்பட்டு சென்றனர்.