Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!

Apr 26, 2024, 9:30 AM IST

இக் கோவிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடப்பது வழக்கம். இதன்படி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியதையடுத்து, நாள்தோறும் தொடர்ந்து கருட வாகன சேவை, அனுமந்த வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், கஜலட்சுமி வாகனம், யானை வாகனம். புஷ்ப விமான வாகன ஊர்வலம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சாமி நகர்வலம் அழைத்து வரப்பட்டார். 

ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர் சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக இத்தேரோட்டத்தை மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பலரும் வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். 

தேரோட்டத்தில் பூங்கரகம் எடுத்தும், காளை ஆட்டம், மயிலாட்டம் போன்றவை முன் செல்ல வாண வேடிக்கையுடன் திரளான பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் கோவிந்தா,கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். இந்த தேர்த்திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பக்தி பரவசத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருவதால், பக்தர்களுக்கு முஸ்லீம்கள் சார்பில்  நீர் மோர் வழங்கப்பட்டது. கடும் வெயிலில் இருந்து அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எண்ணி முஸ்லீம்கள் நீர்மோர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.