Car Festival: திரும்பும் திசையெங்கும் மனித தலைகள்; மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலய தேர் திருவிழா கோலாகலம்

Mar 15, 2024, 5:55 AM IST

விழுப்புரம் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற தளமாக உள்ள அங்காளம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் மாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி பெருவிழா கடந்த 8ம் தேதி மகா சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இதில்  மயானக்கொள்ளை, தீ மிதி, திருத்தேர் வடம் பிடித்தல் ஆகியவை முக்கிய திருவிழாவாகும் இந்நாட்களில் ஆயிரகணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

7-ம் நாள் திருவிழாவான திருத்தேர் வடம் பிடித்தல்  விழாவை முன்னிட்டு  மூலவர்  அங்காளம்மனுக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு மலர்களை கொண்டு அலங்காரம் செய்விக்கப்பெற்று, சரியாக பகல் 3.00 -மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட புதிய திருத்தேரில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அம்மனுக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

 தொடர்ந்து தேர் சக்கரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து 2.45மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் அங்காளம்மா என பக்தி கரகோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த காய்கறிகள், தானிய வகைகள், நாணயங்கள் ஆகியவற்றை  தேரின் மீது  வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

இதில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, சேலம், தருமபுரி மற்றும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.