ஸ்மார்ட்போன் உற்பத்தியை 30 சதவீதம் குறைக்கும் சாம்சங்... வெளியான பகீர் தகவல்...!

By Kevin KaarkiFirst Published May 29, 2022, 5:29 PM IST
Highlights

சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருப்பதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்த ஆண்டு தனது ஸ்மார்ட்போன் உற்பத்தியை 30 சதவீதம் வரை குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் பட்ஜெட் ரக மாடல்கள் மற்றும் ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் பாதிக்கப்பட இருக்கின்றன.

பட்ஜட் பிரிவில் லோ-மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள், பிரீமியம் பிரிவில் ஃபிளாகக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்பட்டுள்ள வரவேற்பு குறைவு, மின்சாதன தட்டுப்பாடு மற்றும் ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் என மூன்று காரணங்களால் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்கள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்து இருப்பதாக கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 310 மில்லியன்:

2022 ஆண்டில் மட்டும் 310 மில்லியன் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்ய சாம்சங் நிறுவனம் ஏற்கனவே முடிவு செய்து இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையை தற்போது 280 மில்லியனாக குறைக்க சாம்சங் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது முந்தைய ஆண்டை விட பத்து சதவீதம் குறைவு ஆகும். 

ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலாண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உற்பத்தி 35 சதவீதம் சரிவடைந்து இருப்பதாக ஷின்ஹன் முதலீட்டு நிறுவன ஆய்வாளர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது காலாண்டு உற்பத்தியில் பத்து சதவீதம் வரை சரிவு ஏற்படலாம் என அவர் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

ஸ்மார்ட்போன்கள் மட்டும் இன்றி சாம்சங் நிறுவனம் தனது மின்சாதன உற்பத்தியை குறைக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களின் எண்ணிக்கையை வெகுவாக அதிகப்படுத்த முடிவு செய்து உள்ளது. இந்த ஆண்டு மட்டும் சாம்சங் நிறுவனம் 18 மில்லியன் மடிக்கக்கூடிய சாதனங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்து இருக்கிறது. 

இந்திய பீச்சர் போன் சந்தை:

இது மட்டும் இன்றி சாம்சங் நிறுவனம் இந்திய பீச்சர் போன் சந்தையை விட்டு விலக திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் சாம்சங் நிறுவனம் ரூ. 15 ஆயிரம் விலை பிரிவில் அதிக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தப் போவதாக கூறப்படுகிறது.  இந்த ஆண்டு இறுதியில் இந்த பீச்சப் போன் சந்தையை விட்டு சாம்சங் நிறுவனம் வெளியேறி விடும் என தெரிகிறது. 

click me!