வாட்ஸ்அப்பில் வலம் வரும் புது ஆபத்து... எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு நிறுவனம்...!

By Kevin KaarkiFirst Published May 29, 2022, 4:54 PM IST
Highlights

வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை அபகரிக்க ஹேக்கர்கள் பின்பற்றும் புது வழிமுறை பற்றி பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

உலகின் பல்வேறு நாடுகளில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. உலகளவில் அதிகம் பேர் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு குளறுபடிகள், ஏமாற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் வாட்ஸ்அப் செயலி மூலம் பயனரின் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. 

விஷம எண்ணம் கொண்ட ஹேக்கர்கள் பல்வேறு புதிய வழிகளில் ஏமாற்றும் பொது மக்கள் தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பறிகொடுக்கும் சம்பவங்கள் நடைபெற்று விடுகின்றன. அந்த வரிசையில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை அபகரிக்க ஹேக்கர்கள் பின்பற்றும் புது வழிமுறை பற்றி பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 

எச்சரிக்கை:

பாதுகாப்பு ஆய்வாளர்கள் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஹேக்கர்கள் விடுக்கும் ஒற்றை போன் கால் மூலம் வாட்ஸ்அப் பயனர் அக்கவுண்ட் விவரங்களை அபகரித்து கொள்வதாக தெரிவித்து இருக்கின்றனர்.

சைபர் அச்சறுத்துல்கள் பற்றிய தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் கிளவுட்செக் நிறுவனம் தான் புது வாட்ஸ்அப் ஊழல் பற்றிய தகவலை வெளியிட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வாட்ஸ்அப் செயலியில் வரும் புது அச்சுறுத்தல் பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார். 

ஒருவரின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அபகரிக்க ஹேக்கர்கள் குறிப்பிட்ட எண்களுக்கு அழைப்புகளை எடுத்து மறுமுனையில் பேசுவோரிடம் 67 அல்லது 405 என துவங்கும் எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள சொல்கின்றனர். பயனர்கள் இவ்வாறு செய்யும் போது, அவர்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆவதோடு போனின் கண்ட்ரோல் ஹேக்கர்கள் வசம் சென்று விடுகிறது.

ஹேக்கர்கள் சார்பில் கூறப்படும் 67 அல்லது 405 என துவங்கும் பத்து இலக்க எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் பட்சத்தில் அடுத்த சில நிமிடங்களிலேயே வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகி, அக்கவுண்ட் கைமாறி விடுகிறது. 

கால் பார்வேர்டிங்:

ஹேக்கர்கள் பயனர்களுக்கு தெரிவிக்கும் மொபைல் எண் ஏர்டெல் மற்றும் ஜியோ சேவையில் கால் பார்வேர்டிங் செய்வதற்கானது ஆகும். இதன் மூலம் பயனர்களுக்கு வரும் அழைப்புகள், அவர்கள் வழங்கும் மற்றொரு மொபைல் எண்ணிற்கு மாற்றப்பட்டு விடும். வாட்ஸ்அப் சேவையை பதிவு செய்யும் போது, ஓ.டி.பி. ஆப்ஷன் கேட்கப்படும். உங்களின் போன் என்கேஜ்டு-இல் இருந்தால் ஓ.டி.பி. ஹேக்கர்களின் மாற்று மொபைல் எண்ணிற்கே அனுப்பப்படும். இவ்வாறு தான் ஹேக்கர்கள் பயனர் விவரங்களை  பறித்துக் கொள்கின்றனர்.

டெலிகாம் நிறுவனங்கள் கால் பார்வேர்டிங் செய்ய இது போன்ற எண்களையே வைத்து இருக்கின்றன. இதன் காரணமாக இந்த வழிமுறை சர்வதேச அளவில் பயன்படுத்துவதற்கான ஆபத்தும் அதிகம். இதுபோன்ற பாதிப்புகளில் சிக்காமல் இருக்க தெரியாத நம்பர்களில் இருந்து அழைப்புகளை பயனர்கள் ஏற்காமல் இருப்பதே நல்லது. மேலும் அறிமுகம் இல்லாதவர்கள் அழைப்புகளில் வந்து கூறும் எதையும் நம்ப வேண்டாம்.

click me!