ஆன்லைன் கேமர்களே உங்களுக்கான முக்கிய அறிவிப்பு!

By Dinesh TGFirst Published Jan 4, 2023, 5:01 PM IST
Highlights

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் விளையாடுபவர்கள் விரைவில் அவர்களுடைய விவரங்களை சமர்ப்பிக்கும்படி கேட்கப்படுவார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன.

இந்தியாவில் ஆன்லைன் கேம்கள் தொடர்பான அனைத்து விஷயங்களையும், குறிப்பாக பண இழப்பு அபாயங்களுக்கான நடவடிக்கைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) கையாளும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்,  இப்போது, ​​ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் பயனர்களின் சுய விவரங்களை (KYC) தெரிந்துகொள்ளுதல் மற்றும் சுயமாக நடத்தை விதிமுறைகள் அமைக்க வேண்டும் என்று ஐடி அமைச்சகம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது.

அதன்படி, ஆன்லைன் கேம்களுக்கு ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பு (SRO) இருக்க வேண்டும் என்றும் கேமிங் நிறுவனங்கள் இந்தியாவில் அலுவலக முகவரியுடன் செயல்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், அதற்கென இணக்க மற்றும் நோடல் அதிகாரிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தொழில்நுட்ப துறையின் முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரம்மி போன்ற திறன் சார்ந்த விளையாட்டுகளுடன் தொடர்புடைய பண இழப்பு அபாயங்களிலிருந்து கேமர்களை பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்  மேலும் இதுபோன்ற விளையாட்டுகள் இந்தியச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். பயனர்களின் KYC ஆனது பண இழப்பு அபாயங்களில் இருந்து காக்க உதவும், அதே சமயத்தில் ஆன்லைன் கேம்களில் ஏற்படும் நிதி இழப்புகளைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது. ஆன்லைன் கேம் நிறுவனங்கள்,  SRO ஆல் அங்கீகரிக்கப்பட்ட கேம்களில் பதிவு ஐடியை காட்ட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

Google Voice அம்சத்தில் புதிய அப்டேட்! இனி ஸ்பேம் கால்களை எளிதில் கண்டறியலாம்!

கேம்களில் பயனர்கள் செய்யும் பண முதலீடுகளைப் பாதுகாக்க எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கை பட்டியலையும் நிறுவனங்கள் வெளியிட வேண்டும். இது தவிர, கேமிங் நிறுவனங்கள் ஆன்லைன் கேம் மற்றும் போதைப்பொருளுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து பயனர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
கேமர்கள் கணக்கை உருவாக்கி ஆன்லைன் கேமை விளையாட விரும்பினால் முதலில் KYC உடன் செய்து முடிக்கும்படி கேட்கப்படுவார்கள்.

18 வயதிற்குட்பட்டவர்கள் பணமிழப்பு அபாயம் உள்ள ஆன்லைன் கேம்களை விளையாடுவதற்கு பெற்றோரின் அனுமதியின்றி விளையாட முடியாது. இது ஒரு முன்மொழிவு மட்டுமே. இந்த விதிகள் பிப்ரவரிக்குள் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, அடுத்த மாதம் இது குறித்து மேலும் தெளிவான விவரங்கள் கிடைக்கும்.
 

click me!