ஒருதலை காதல்.. வீட்டில் இருந்த இளம்பெண் எரித்து கொலை..! போலீசாரிடம் சிக்கினான் கொடூரன்..!

First Published Nov 14, 2017, 11:30 AM IST
Highlights
young lady murder police arrest murderer in chennai


தனது காதலை ஏற்றுக்கொள்ளாத இளம்பெண்ணை இளைஞர் ஒருவர், எரித்து கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் ஏஜிஎஸ் காலணியைச் சேர்ந்தவர் இந்துஜா. இந்துஜாவை கடந்த சில மாதங்களாகவே ஆகாஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்துள்ளார். தன்னை காதலிக்கும்படி இந்துஜாவிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால், ஆகாஷின் காதலை இந்துஜா ஏற்கவில்லை என கூறப்படுகிறது. 

ஆகாஷின் தொல்லை தாங்கமுடியாமல், ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்துவந்த இந்துஜா, அந்த வேலையை கூட விட்டுவிட்டார் என கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதமாகவே இந்துஜா வீட்டில்தான் இருந்துள்ளார்.

தனது காதலை ஏற்றுக்கொள்ளாத இந்துஜாவை பழிவாங்க நினைத்துள்ளார் ஆகாஷ். இந்நிலையில், நேற்றிரவு இந்துஜாவின் வீட்டிற்கு பெட்ரோல் கேனுடன் சென்றுள்ளார். 

அப்போது, இந்துஜா, அவரது தாய் ரேணுகா, தங்கை நிவேதிதா, தம்பி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டிற்கு சென்ற ஆகாஷ், இந்துஜாவிடம் தன்னை காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், இந்துஜா மறுத்ததால், அவர்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியோடிவிட்டார் ஆகாஷ்.

ஆகாஷின் இந்த கொடூர செயலால், இந்துஜா, அவரது தாய், தங்கை ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனர். இதைக் கண்டு, அவர்களைக் காப்பாற்ற முயன்ற அக்கம்பத்தினர் சிலருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இந்துஜா, அவரது தாய், தங்கை ஆகிய மூவரும் பலத்த தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இந்துஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்துஜாவின் தாய்க்கும் தங்கைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தப்பியோடிய ஆகாஷை வலைவீசி தேடிய போலீசார், ஆகாஷைக் கைது செய்தனர். குடும்பத்துடன் தீவைத்த கொடூர சம்பவம் தொடர்பாக ஆகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

click me!